பஞ்சாப் முழுக்க (2019-20ல்) 152 பிரதானக் களங்கள், 279 துணைக் களங்கள் மற்றும் 1,389 கொள்முதல் மையங்கள் என வியாபித்திருக்கும் பெரிய வலைப்பின்னல். ஜஸ்விந்தர் சிங்குக்கு அது பாதுகாப்பு க்கான வலையாக இருந்தது. இத்தகைய மண்டி முறையில் ஒரு விவசாயி பாதுகாப்பாக உணர்கிறார் என்கிறார் சங்க்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது ஜஸ்விந்தர். அவரின் குடும்பம் 17 ஏக்கர் நிலத்தில் பயிரிடுகிறது. “என்னுடைய விளைச்சலை எந்தத் தயக்கமோ பணம் கிடைக்குமா என்கிற சந்தேகமோ இன்றி மண்டிக்கு எடுத்துச் செல்ல முடியும். என்ன முறை அது என எனக்குத் தெரியும். நிச்சயமாக எனக்கான பணமும் கிடைக்கும்.”
பிரதானக் களங்கள்தான் பெரிய மண்டிகள் (சுனமில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பதைப் போல்). இந்தக் களங்களில், விவசாயிகளுக்கான இடங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அவர்களின் விளைச்சலைக் கொண்டு வந்து அங்கு கொட்டி வைக்கலாம். அவர்களுக்கான தரகு முகவரின் கடைகளுக்கு முன்னால் வழக்கமாக கொட்டி வைக்கப்படும். பிரதானக் களங்களில் இடமில்லாத காலங்களில் அவற்றுக்கு அருகேயே வழங்கப்படும் இடங்களே துணைக் களங்கள் ஆகும். கொள்முதல் மையங்கள் என்பவை சிறிய மண்டிகள். வழக்கமாக அவை கிராமங்களில் இருக்கும் (புகைப்படங்களில் இருக்கும் ஷெரோன் மண்டி போல). இவை எல்லாமும் இணைந்ததுதான் பஞ்சாபின் விரிந்த விளைபொருட்கள் சந்தைப்படுத்தும் கமிட்டியின் வலைப்பின்னலாகும்.
“என்னுடைய பயிர் விற்கப்படும்போது எனக்குத் தரகர் ஒரு ஜெ-படிவம் தருவார். பணம் கிடைக்கும் வரை அதுதான் எனக்கானப் பாதுகாப்பு,” என்கிறார் ஜஸ்விந்தர். “எல்லாவற்றைக் காட்டிலும் மிக முக்கியமாக எனக்கு வர வேண்டியப் பணத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் நான் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு தெரிய வேண்டும். அதுதான் எனக்கு பெரிய பாதுகாப்பு,” என்கிறார் அவர் (பஞ்சாப் விவசாயப் பொருட்கள் சந்தைச் சட்டத்தைக் குறிப்பிட்டு).
பயிர்கள் முறையான வகையில் தனியாராலும் அரசின் உணவு வாரியத்தாலும் கொள்முதல் செய்யப்படுவதை மண்டிகள் முறை உறுதிப்படுத்துகிறது. பிரதானமாக கோதுமையும் நெல்லும் வாங்கப்படுகின்றன. மாநில அரசின் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்கப்படுகின்றன. பஞ்சாபின் மண்டிகளை தானியம் அடைந்ததும், உணவு வாரியம் அதன் தரத்தை பரிசோதிக்கிறது. அவை கொண்டிருக்கும் ஈரப்பதம் முதலிய தன்மைகள் தரமதிப்பீடு செய்யப்படுகின்றன. பிறகு அந்த தானியம் ஏலம் விடப்பட்டு விற்கப்படுகிறது. இம்முறை தரகர்களின் வழியாக செயல்படுகிறது. இந்த தொடர்புச் சங்கிலியில் அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அணுகுதலும் சார்ந்திருத்தலும் இத்தகைய முறையின் முக்கியச் சிறப்புகள் என்கிறார் துகால் கலன் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது அமந்தீப் கவுர். “முக்கியமான விஷயம் என்னவென்றால் என்னுடைய விளைச்சலை நேராக கிராமத்தின் மண்டிக்கு கொண்டு செல்ல முடியும். அது சுலபமாக இருக்கிறது. என் பயிருக்கு கிடைக்கும் விலையையும் (குறைந்தபட்ச ஆதார விலை) என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கரும்பு விஷயத்தில் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்கென மையப்படுத்தப்பட்ட அமைப்பு எதுவும் இல்லை. எனவே விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதற்காக ஒவ்வொரு நகரமாக அலைய வேண்டியிருக்கிறது. நல்ல விலை தேடி மாநிலம் முழுவதும் நாங்கள் எப்படி அலைய முடியும்?”





















