சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறக் கொடிகளை உயர்த்திப் பிடித்தபடி மேடையைக் கடந்து அவர்கள் நடந்தார்கள். பெண் விவசாயிகளின் குழு ஒன்று தலைகளில் பச்சை துப்பட்டாக்கள் அணிந்து அணிவகுத்து வந்தனர். சில ஆண்கள் அரைவெள்ளை மற்றும் பழுப்பு சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை தலைப்பாகைகளை அணிந்து ட்ராக்டர்கள் ஓட்டினர். கொடிகளுடனான வெவ்வேறுக் குழுக்கள் நாள் முழுவதும் மேடையைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு நிறமும் ஒரு காவியக் கவிதையின் வரிகளைப் போல் மிதந்து சென்றது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியின் எல்லையை அடைந்து ஒரு வருடம் கழிந்துவிட்டது. ஓராண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகளும் ஆதரவாளர்களும் சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் போராட்டக் களங்களில் நிரம்பினர்.
வெற்றி மற்றும் கண்ணீர், நினைவுகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றின் நாளாக அது இருந்தது. இந்தப் போரில் வெற்றிக் கிடைத்துவிட்டது என்றாலும் இறுதி வெற்றிக்கு இன்னும் தூரம் இருக்கிறது என்கிறார் 33 வயது குர்ஜீத் சிங். மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என நவம்பர் 19ம் தேதி பிரதமரால் அறிவிக்கப்பட்டபோது அவர் சிங்குவில் இருந்தார். பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தின் அரையன்வாலா கிராமத்தில் சிங்குக்கு 25 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது.
“இந்த வெற்றிக்கு மக்களே உரிமை கொண்டவர்கள். ஒரு பிடிவாதமான நிர்வாகியை நாம் தோற்கடித்திருக்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்கிறார் 45 வயது குர்ஜீத் சிங் ஆசாத். அவரும் அறிவிப்பு நாளில் சிங்குவில்தான் இருந்தார். ஆசாதின் கிராமமான பாட்டியானில் அவருக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவரது மாமாக்கள் கோதுமை மற்றும் நெல்லை விளைவிக்கின்றனர். “இந்தப் போர் நவம்பர் 26-ல் துவங்கவில்லை. அந்த நாளில் அப்போர் தில்லியை வந்தடைந்தது,” என்கிறார் அவர். “மசோதாக்கள் சட்டங்களாக்கப்படுவதற்கு பல காலத்துக்கு முன்பிருந்தே விவசாயிகள் போராடத் துவங்கி விட்டனர். மூன்று வேளாண் சட்டங்களும் செப்டம்பர் 2020-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு, அனைவரும் தில்லிக்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டது. நாங்கள் அழைப்பை ஏற்று வந்தோம்.”
கடந்த வருடத்தில் நடந்தப் பேரணியை அவர் நினைவுகூர்ந்தார். “தில்லியை நோக்கி நாங்கள் நகரத் தொடங்கியதும் அரசு நீர் பீய்ச்சத் தொடங்கியது. குழிகளை தோண்டினார்கள். வேலிகள் கட்டி முட்கம்பிகள் போட்டுத் தடுக்க நாங்கள் ஒன்றும் போர் தொடுப்பதற்காக வரவில்லை.” (கடந்த வருடத்தில் 62 வயது ஜோக்ராஜ் சிங், காவலர்களுக்கும் அவரைப் போன்ற விவசாயிகள்தான் உணவு போடுவதாகவும் காவலர்களும் அவர்களுக்கு சொந்தப் பிள்ளைகள் போன்றவர்கள்தான் என்றும் காவலர்களின் லத்திகளுக்கு உணவு தேவைப்பட்டால் தங்களின் முதுகுகளை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.)




















