உஸ்மானாபாத் மாவட்டத்தை இந்தாண்டு கோவிட்-19 இரண்டாவது அலை தாக்கியபோது, கதவுகள் மட்டும் அடைக்கப்படவில்லை, அவர்களுக்கு தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. துளஜாபூர் வட்டாரத்தில் துளஜா பவானி கோயில் மூடப்பட்டது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கோவிட்-19 தொற்றில் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய ஜெய்சிங் பாட்டில் பாதுகாப்பான காலம் வரும் வரை கோயிலுக்குச் செல்லப் போவதில்லை என உறுதி ஏற்றுள்ளார். “நான் ஒரு பக்தன்,” என்கிறார் அவர். “நான் மக்களின் நம்பிக்கையை மதிக்கிறேன். ஆனால் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் கோயிலைத் திறப்பது நல்லதல்ல.”
துளஜா பவானி கோயில் டிரஸ்டில் எழுத்தராக பணியாற்றுகிறார் 45 வயது பாட்டீல். “இந்தாண்டு பிப்ரவரி மாதம் நூற்றுக்கணக்கானோர் நிற்கும் வரிசையை நிர்வகிக்க சொன்னார்கள்,” என்கிறார் அவர். மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற யாத்திரை தளங்களில் இதுவும் ஒன்று என்பதால் தினமும் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருகின்றனர். “பக்தர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். கோயிலுக்குள் அவர்கள் செல்வதை தடுத்தால் அடித்துவிடுவார்கள். கூட்டத்தை நிர்வகிக்கும்போதுதான் எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டது.”
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் உதவியோடு இரண்டு வாரங்களுக்கு மேல் அவர் இருந்துள்ளார். அவரது இரத்த ஆக்சிஜன் அளவு 75-80 சதவீதம் வரை ஏற்ற இறக்கம் கண்டுள்ளது. 92 சதவீதத்திற்கு குறைவாக இருந்தாலே கவலைக்குரியது என்கின்றனர் மருத்துவர்கள். “நான் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன்,” என்கிறார் ஜெய்சிங். “மாதங்கள் ஆகியும் நான் சோர்வாகவே உணர்கிறேன்.”










