தினமும் மாலை 5 மணிக்கு வேலை முடிந்து திரும்பும்போது டாக்டர் ஷப்னம் யாஸ்மின் நேராக தனது வெளிர் பழுப்பு நிற வீட்டின் மொட்டை மாடிக்குச் செல்கிறார். அங்கு அவர் குளித்துவிட்டு பணியிடத்திற்கு எடுத்துச் சென்ற பேனாக்கள், டைரிக்கள் போன்றவற்றை சுத்திகரிப்பு செய்து, தனது துணிகளை துவைக்கிறார் (இதற்காகவே மொட்டை மாடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது). பிறகு படியிறங்கி குடும்பத்தினரிடம் அவர் வருகிறார். கடந்தாண்டு முதலே இதே முறையை அவர் கடைப்பிடித்து வருகிறார்.
“பெருந்தொற்று [ஊரடங்கு], காலம் முழுவதும் நான் வேலை செய்தேன், எல்லாம் மூடி கிடந்தன. தனியார் மருத்துவமனைகள் கூட மூடி இருந்தன. எனக்கு பரிசோதனையில் பாசிட்டிவ் வரவில்லை, உடன் பணிபுரிவோர் சிலருக்கு வந்தது. உண்மையில் நாங்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட இரு கர்ப்பிணிகளை வெற்றிகரமாக கையாண்டோம்,” என்கிறார் வடகிழக்கு பீகாரின் கிஷன்கஞ்ச் நகரில் தனது வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தூரமுள்ள சர்தார் மருத்துவமனையில் மகளிரியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையாளராக பணியாற்றும் 45 வயது மருத்துவர் யாஸ்மின்.
ஷப்னத்திற்கான கடமைகள் அதிகம். கரோனா வைரஸ் தாக்கினால் ஆபத்து அதிகம். அவரது தாய், 18 மற்றும் 12 வயது மகன்கள், 53 வயது கணவர் இர்தசா ஹசன் ஆகியோர் வீட்டில் உள்ளனர். அவரது கணவர் சிறுநீரக சிக்கலில் இருந்து இப்போதுதான் குணமடைந்து வருகிறார். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். “என் தாய் அர்சா சுல்தானாவினால்தான் என்னால் [கடந்தாண்டு] வேலைசெய்ய முடிந்தது. அவர் பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறார். இல்லாவிடில் மருத்துவர், இல்லத்தரசி, ஆசிரியர், வழிகாட்டி என சுழன்று கொண்டே இருக்க வேண்டியிருக்கும்,” என்கிறார் யாஸ்மின்.
2007ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தது முதல் அவரது வாழ்க்கை இப்படித்தான் சுழல்கிறது. “எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கும்போது நான் கருவுற்றிருந்தேன். திருமணமாகி ஆறு ஆண்டுகள் என் குடும்பத்துடன் இருந்தது கிடையாது. என் கணவர் பட்னாவில் வழக்கறிஞராக பணியாற்றினார். நான் பயிற்சிக்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்,” என்கிறார் யாஸ்மின்.
சதார் மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு அவரது வீட்டிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாகூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். சில ஆண்டுகள் தனியார் மருத்துவராக பயிற்சி செய்த பிறகு அரசு மருத்துவர் வேலை கிடைத்தது. அவர் 2003ஆம் ஆண்டு ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். 2007ஆம் ஆண்டு பட்னா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டமும் பெற்றார். தாகூர்கஞ்ச் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளூர் பேருந்துகளில் சென்று வந்தார். அவரது இரண்டாவது குழந்தையை தாயிடம் விட்டு வந்தார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர் தாகூர்கஞ்சிற்கு தாய், குழந்தைகளுடன் மாற்றிக் கொண்டு சென்றது மிகவும் கடினமான காலகட்டம். அவரது கணவர் இர்தசா பட்னாவில் தங்கி கொண்டு மாதம் ஒருமுறை குடும்பத்தைப் பார்க்க வந்துள்ளார்.







