1960களில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்ததும் திலாவர் ஷிகால்கர் புன்னகைத்தார். பட்டறையில் யாரோ ஒருவர் இரும்புத்துண்டை சுத்தியல் கொண்டு அடித்திருக்கிறார். அதிலிருந்து பறந்த இரும்புத் துகள்கள் அவருடைய இடது ஆட்காட்டி விரலை காயப்படுத்தியிருக்கிறது. ஐம்பதாண்டு காலம் ஓடி விட்டது. ஆனால் தழும்பு அடையாளமாக தங்கி விட்டது. புன்னகையுடன் அவர், “என் உள்ளங்கைகளை பாருங்கள். காய்ந்து போயிருக்கிறது,” என்றார்.
68 வயதாகும் திலாவர் அந்த ஐம்பது வருட காலத்தில் இரும்பை பொறி பறக்க ஒரு நாளுக்கு 500 தடவையாவது சுத்தியலால் அடித்திருப்பார். ஐந்து கிலோ சுத்தியலை கொண்டு உலோகத்தை அந்த காலத்தில் 80 லட்சம் முறையாவது அடித்திருப்பார்.
சங்க்லி மாவட்டத்தின் வல்வா தாலுகாவின் பகானி கிராமத்தில் இருக்கும் ஷிக்கால்கர் குடும்பம் இரும்புக்கொல்லர் வேலையை நூற்றாண்டுக்கும் அதிக காலத்துக்கு செய்து கொண்டிருக்கிறது. வீடுகளிலும் நிலத்திலும் பயன்படுத்தும் இரும்புக் கருவிகளை செய்யும் தொழில் செய்கின்றனர். குறிப்பாக இடுக்கிகளை மிக நுணுக்கமாக நல்ல வடிவத்துடனும் கூர்மையுடனும் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்.
இடுக்கிகளில் பல வகை இருக்கிறது. நான்கு அங்குலம் தொடங்கி இரண்டு அடி வரை பல அளவுகளில் இருக்கின்றன. சின்ன இடுக்கிகள் கொட்டை பாக்கு வெட்டவும் காய்ந்த தேங்காய்கள் மற்றும் முறுக்கு கயிறுகளை வெட்டவும் பயன்படுபவை. பெரிய இடுக்கிகள் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை (நகை செய்பவர்கள் பயன்படுத்துவர்) வெட்டவும் பெரிய வகை பாக்குகளை வெட்டவும் பயன்படும்.
ஷிகால்கர் குடும்பம் செய்யும் இடுக்கிகள் பிரபலமானவை. வெளியூரிலிருந்து பகானிக்கு வந்து வாங்கிச் செல்லுமளவுக்கு புகழ் வாய்ந்தவை. அக்லுஜ், கொல்ஹாப்பூர், ஒஸ்மனாபாத், சங்கோல், மகாராஷ்டிராவின் சங்க்லி, கர்நாடகாவின் அத்னி, பிஜாப்பூ, ராய்பக் போன்ற இடங்களிலிருந்து வந்து வாங்குவார்கள்.










