“மீன் வெட்டும் பெண்களுக்கான இடம் ஒன்றுமில்லை,” என்கிறார் கடலூர் மாவட்டத்தின் கிஞ்சம்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளரான கலா.
60 வயது நிரம்பிய அவர், சிங்காரத்தோப்பு பாலத்துக்கு அடியில் அமர்ந்திருக்கிறார். கற்களாலும் உலோகத்தாலும் கட்டப்பட்டிருக்கும் இக்கட்டுமானம் கடலூரின் ஓல்ட் டவுன் துறைமுகத்துக்கு வெளியே அமைந்திருக்கிறது. இங்கு சுமாராக 20-30 மீன் வியாபாரிகளும் மீன் வெட்டும் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். அனைவரும் பெண்கள்.
மாவட்டத்தில் 57.5 கிலோமீட்டர் நீள கடற்கரை இருக்கிறது. குடோன்கள், கிடங்குகள், கடைகள், மீனவப் படகுகள் போன்றவை துறைமுகத்தில் நிரம்பியிருக்கின்றன.
“நிறைய வணிகர்களும் ட்ரக்குகளும் வரத் தொடங்கியபின் துறைமுகத்தில் எங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது,” என்கிறார் கலா (இந்த பெயரை மட்டுமே அவர் பயன்படுத்துகிறார்). “வெளியே தள்ளப்பட்ட நாங்கள், பாலத்துக்கடியில் இருக்கும் இந்த பொது இடத்துக்கு வந்து சேர்ந்தோம். துறைமுகத்துக்கு வெளியே இப்பகுதி இருக்கிறது,” என்கிறார் அவர்.
விற்பது, வெட்டுவது, காய வைப்பது, மீன் கழிவுகளை விற்பது போன்ற பணிகளை செய்யும் கலா போன்ற பெண்கள் படிப்படியாக வெளியேற்றப்படுகின்றனர். உடன் படிக்க: தலைகள், வால்கள் முதலியவற்றால் புலி வாழ்க்கை ஓட்டுகிறார்
பொதுவாக மீனவப்பெண்கள் மீன் விற்பவர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். முதலீடு கிட்டாத பெண்களும் உடல்ரீதியாக பிரச்சினைகள் கொண்ட பெண்களும் மீன் விற்பவர்களுக்கு அருகே அமர்ந்து மீன்களை சுத்தப்படுத்தி வெட்டும் வேலைகளை செய்கின்றனர்.
”விற்பனையாளர்களுக்கு அருகே நாங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் மீன் வாங்கும் வாடிக்கையாளர்கள் மீன் வெட்டவும் சுத்தப்படுத்தவும் எங்களிடம் வருவார்கள். விற்பனையாளர்களுக்கு அருகே நாங்கள் இல்லையெனில் வியாபாரம் நடக்காது,” எனச் சுட்டிக் காட்டுகிறார் கலா.










