பல பள்ளிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூத்த அதிகாரியிடம் இருந்து பளபளக்கும் ஒரு பைசா நாணயத்தை பரிசாக வாங்க அவர் மேடையிலிருந்தார். இது நடந்தது பஞ்சாபில், 1939ம் ஆண்டில். அவருக்கு 11 வயது. மூன்றாம் வகுப்பு படித்தார். வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தார். அதிகாரி அவரின் தலையில் தட்டிக் கொடுத்து, ‘பிரிட்டன் வாழ்க, ஹிட்லர் ஒழிக’ என கோஷமிட சொன்னார். இளம் பகத்சிங்காக இருந்தவர் பார்வையாளர்களை நோக்கிப் பார்த்தார். பிறகு கோஷமிட்டார்: “பிரிட்டன் ஒழிக, இந்துஸ்தான் வாழ்க.”
விளைவுகள் உடனடியாக நேர்ந்தன. அதிகாரியால் அப்போதே தாக்கப்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியிலிருந்து வெளியே எறியப்பட்டார். பிற மாணவர்கள் அதிர்ந்து போய் அமைதியாக பார்த்தனர். பின்னர் ஓடி விட்டனர். உள்ளூர் பள்ளிகளின் பொறுப்பிலிருந்த - இன்று நாம் ஒன்றிய கல்வி அதிகாரி என அழைப்பவருக்கு நிகரான - அதிகாரி, துணை ஆணையரின் ஒப்புதலோடு ஓர் அறிவிக்கையை வெளியிட்டார். அவரின் வெளியேற்றத்தை கடிதம் உறுதிபடுத்தியது. ‘ஆபத்தானவர்’, ‘புரட்சியாளர்’ என அக்கடிதம் 11 வயதிலேயே அவரை விவரித்திருந்தது.
இதன் அர்த்தம் எந்த பள்ளியும் பகத் சிங் ஜக்கியனை அனுமதிக்காது என்பதுதான். அச்சமயத்தில் அதிக பள்ளிகளும் இல்லை. பெற்றோர் மட்டுமில்லாது பலரும் முடிவை மாற்றிக் கொள்ளும்படி அதிகாரிகளிடம் கெஞ்சினர். நிறைய தொடர்புகள் கொண்ட குலாம் முஸ்தபா என்னும் ஜமீந்தார் கடுமையான முயற்சிகள் அவர் தரப்பில் எடுத்தார். ஆனால் அரசின் எடுபிடிகள் கடும் கோபத்தில் இருந்தனர். அவர்களுக்கு மேலிருந்தவரை ஒரு சிறுவன் அவமதித்துவிட்டான். பகத் சிங் ஜக்கியான் முறையான கல்விக்கு மீண்டும் திரும்பவில்லை. ஆனாலும் அவரின் வாழ்க்கை வண்ணமயமாகவும் அசாதாரணமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
அப்போதும் சரி, 93 வயதாகும் இப்போதும் சரி கடுமையான வாழ்க்கைப் பள்ளியில் நட்சத்திர மாணவராகவே அவர் இருக்கிறார்.












