“என் ஐந்து வயது மகளுக்கு கடுமையான காய்ச்சல்“ என்று சொல்லும் ஷகீலா நிஜாமுதீன், “அவளை என் கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மருத்துவமனைக்கு செல்லக் கூட எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை“ என்கிறார்.
அகமதாபாத் நகரின் சிட்டிசன் நகர் நிவாரண காலனியில் வசிக்கிறார் 30 வயதாகும் ஷகீலா. அவர் வீட்டிலிருந்தபடியே காத்தாடிகளை தயாரித்து விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். தினக்கூலிகளான ஷகீலாவும், அவரது கணவரும் ஊரடங்கால் வருமானத்தையும் மிச்சமிருந்த நம்பிக்கையையும் இழந்துள்ளனர். “சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது“ என்று என்னிடம் வீடியோ அழைப்பில் அவர் சொன்னார். ‘வீட்டிலிருந்தபடியே கைவைத்தியம் செய்துகொள்ளுங்கள்’ என்கிறார்கள். அதையும் மீறி மருத்துவமனைக்குச் செல்ல முயன்றால் மருத்துவமனை கோப்புகள், ஆவணங்கள் வேண்டும் என்று காவல்துறையினர் கேட்பார்கள். இவற்றுக்கு நான் எங்கே போவது?“ என்கிறார் ஷகீலா.
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 50,000க்கும் மேற்பட்டோருக்கு, 2004ஆம் ஆண்டு தொண்டு நிறுவனங்கள் இணைந்து கட்டிய 81 காலனிகளில் இதுவும் ஒன்று. இப்போதைய ஊரடங்கு இம்மக்களுக்கு ஒரு கொடுங்கனவாக ஆகிவிட்டிருக்கிறது.
தொலைக்காட்சித் திரையில் நடிகர் அமிதாப் பச்சன் தோன்றி ஒன்றிணைவோம், கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்போம் என்று சொல்வதையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
“வேலையை இழந்துவிட்டு எல்லோரும் வீட்டிற்குள் கைகளை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது எதற்காக கைக் கழுவ வேண்டும், சொல்லுங்கள்?” என கேட்கிறார் ரேஷ்மா சையத். இவர் சிட்டிசன் நகர் சமூகத் தலைவராக உள்ளார். ரேஷ்மா ஆப்பா என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுகிறார். 2002 கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட நரோதா பாட்டியா என்கிற இந்த மறுவாழ்வு காலனி, அகமதாபாத்தில் உள்ள 15 காலனிகளின் ஒன்று. கேரள மாநில இஸ்லாமிய நிவாரணக் குழுவின் உதவியோடு 2004ஆம் ஆண்டு இந்த காலனி கட்டப்பட்டதாக அங்குள்ள கல்லில் எழுதப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிர் பிழைத்த 40 குடும்பங்கள் தங்களுக்கு சொந்தமான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் இங்கே வந்துள்ளனர்.










