அதிகாலை 6 மணி. சரண்யா பலராமன் கும்மிடிப்பூண்டி வீட்டிலிருந்து கிளம்பி விட்டார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்த சிறு டவுனின் ரயில் நிலையத்தில் மூன்று குழந்தைகளுடன் அவர் ரயிலேறுகிறார். இரண்டு மணி நேரங்களில் அவர், 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறார். இங்கிருந்து, தாயும் குழந்தைகளும் பள்ளியை அடைய இன்னொரு உள்ளூர் ரயிலில் 10லிருந்து 12 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
மாலை நான்கு மணிக்கு, இப்பயணம் தலைகீழாக நடக்கும். வீடு வந்து அவர்கள் சேர இரவு 7 மணி ஆகிவிடும்.
பள்ளிக்கும் வீட்டுக்கும் சென்று வரும் 100 கிலோமீட்டர் தூரப் பயணத்தை வாரத்தில் ஐந்து முறை மேற்கொள்கின்றனர். அது பெரும் செயல் என்னும் சரண்யா, “தொடக்கத்தில் (திருமணத்துக்கு முன்), பேருந்தோ ரயிலோ எங்கே ஏறுவதென எனக்கு தெரியாது. எங்கே இறங்க வேண்டுமென்று கூட தெரியாது,” என்கிறார்.

























