தொலைவில் புழுதி மண்டலத்தினூடே மோட்டார் சைக்ளின் ஃபட்ஃபட் சத்தம் கேட்கிறது. நீலநிறச் சேலையும், பெரிய மூக்குத்தியும், முகம் கொள்ளாச் சிரிப்புமாய் வந்திறங்குகிறார் அடைக்கலச் செல்வி. `வீடு பூட்டியிருக்கும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வந்துடறேன்`, என்று சற்று நேரம் முன்பு, தன் மிளகாய்த் தோட்டத்தில் இருந்து நமக்கு செய்தி அனுப்பியிருந்தார் மார்ச் மாதம்தான். ஆனாலும் ராமநாதபுரத்தின் மதியநேரச் சூரியன் நம்மைச் சுட்டெரிக்கிறார். தனது மோட்டார் சைக்கிளை கொய்யா மரத்தின் குளுமையான நிழலில், நிறுத்தி விட்டு, வீட்டைத் திறந்து, நம்மை வரவேற்கிறார் அடைக்கலச் செல்வி. தொலைவில் சர்ச்சின் மணி ஒலிக்கிறது. குடிக்க நீர் கொண்டு வருகிறார். குடித்து விட்டு, பேச அமர்கிறோம்.
பேச்சு அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து தொடங்குகிறது. அவர் வயதுப் பெண்கள் கிராமங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது கொஞ்சம் அதிசயம்தான். `ஆனா, ரொம்ப உதவியா இருக்கு`, எனச் சொல்லிச் சிரிக்கிறார், 51 வயதான அடைக்கலச் செல்வி. ` 8ஆவது படிக்கறப்போ, எங்கண்ணன் சொல்லிக் கொடுத்தாரு.. ஏற்கனவே சைக்கிள் ஓட்டத் தெரியும்கறதனால, கத்துக்கறது கஷ்டமாயில்ல`.
இதில்லன்னா ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருந்திருக்கும் என்கிறார் அவர். `என் வீட்டுக்காரரு பல வருஷமா வெளியூர்ல இருக்காரு. அவர் ப்ளம்பர் வேலை பாக்குறவர். மொதல்ல சிங்கப்பூர், அப்புறம் துபாய், கத்தார்னு வேலைக்குப் போனார். நான் தனியாளா பொண்ணுங்கள வளத்துகிட்டே, விவசாயத்தையும் பாத்துகிட்டேன்`.
ஜே. அடைக்கலச் செல்வி நினைவு தெரிந்த நாளில் இருந்தே விவசாயம் செய்து வருபவர். தரையில் சம்மணமிட்டு நேராக அமர்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் வேளாண் குடியில் பிறந்தார். அது அவர் கணவரின் ஊராரன முதுகளத்தூர் பி.முத்துவிஜயபுரத்தில் இருந்து ஒன்றரை மணிநேரம் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் உள்ளது. `என் அண்ணன்கள் எல்லாம் சிவகங்கைல இருக்காங்க. அங்க நெறய போர் கிணறுகள் இருக்கு. இங்க விவசாயத்துக்கு மணிக்கு 5 ரூபாய்னு தண்ணி வாங்க வேண்டியிருக்கு. விவசாய நீர் ராமநாதபுரத்தில் பெரிய பிசினஸ்.




























