கெஹல்யா வாசவி தூக்கமின்றி, ஓய்வின்றி, வலியால் துடித்தபடி கொசுவலையை போர்த்திக் கொண்டு தார்பாயில் படுத்திருந்தார். அவரது துன்பத்தைக் கண்ட 18 வயது மகள் லீலா கால்களை மசாஜ் செய்துவிட்டு சிறிது நிவாரணம் தர முயல்கிறாள்.
பல மாதங்களாக அவர் அதே கட்டிலில் நாள்முழுவதும் படுத்துக்கிடக்கிறார். இடது கன்னத்தில் காயமும், வலது நாசியில் உணவுக்கான குழாயும் பொறுத்தப்பட்டுள்ளது. “அவரால் அசைய முடியவில்லை, பேசவும் முடியவில்லை. காயம் வலிக்கிறது,” என்கிறார் அவரது 42 வயதாகும் மனைவி பெஸ்ரி.
வடமேற்கு மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்டம் சிஞ்ச்பாடா கிறிஸ்தவ மருத்துவமனையில் இந்தாண்டு ஜனவரி 21ஆம் தேதி 45 வயதாகும் கெஹல்யாவுக்கு உள் கன்னத்தில் புற்றுநோய் (வாய் புற்று) இருப்பது கண்டறியப்பட்டது.
மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய கோவிட்-19 இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கு 45 முதல் 59 வயது பிரிவினருக்கான மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி தகுதிக்கான 20 நோய்கள் பட்டியலில் அவரது புற்றுநோயும் இடம்பெற்றுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி தடுப்பூசி என்பது “60 வயதை கடந்தவர்கள், 45 முதல் 60 வயது வரையிலான நோயாளிகள் என குறிப்பிட்ட வயது பிரிவு குடிமக்கள்” கிடைக்கப்பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது. (ஏப்ரல் 1 முதல் 45 வயதைக் கடந்த நோயாளிகள் அல்லது நோயற்றவர்களுக்கும் தடுப்பூசிக்கான அனுமதி அளிக்கப்பட்டது).
வயது வரம்புகள், நோய் பட்டியல் அல்லது விரிவுப்படுத்தப்பட்ட தகுதி என எதுவும் கெஷல்யா, பெஸ்ரி குடும்பத்திற்கு ஓரளவே பயன்தரும். பழங்குடியின பில் சமூகத்தைச் சேர்ந்த வாசவி குடும்பத்திற்கு தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை. தடுப்பூசி மையமானது, அக்ரானி தாலுக்காவில் உள்ள அவர்களின் கும்பாரி கிராமத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தட்கான் கிராமப்புற மருத்துவமனையில் உள்ளது. “நாங்கள் நடந்துதான் செல்ல வேண்டும், வேறு வழியில்லை,” என்கிறார் பெஸ்ரி.












