ஜஸ்ரவுரை விட்டு கிளம்பும் முன் 40 வயது சர்ப்தீஜ் வேளாண் சட்டங்களை பற்றி பேசியும் அவற்றை எதிர்த்து போராடியும் இருந்திருக்கிறார். அம்ரிட்சர் மாவட்டத்தின் அஜ்னாலா தாலுகாவில் 2159 பேர் வசிக்கும் அவரின் கிராமத்தில் வீடுதோறும் சென்று சட்டங்களுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார். நவம்பர் மாதம் 25ம் தேதி ஊரிலிருந்து கிளம்பிய 14 ட்ராக்டர் ட்ராலிகளில் அவரும் சேர்ந்து கொண்டார். ஜம்ஹூரி விவசாய சங்கம் (இந்தியா முழுவதும் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்திருக்கும் விவசாய சங்க கூட்டமைப்பில் ஒன்று) ஒருங்கிணைத்த பயணத்தில் அதிகாலையே கிளம்பி நவம்பர் 27ம் தேதி சிங்குக்கு வந்து சேர்ந்தார்.
தற்போது சர்ப்ஜீத், முன்னெப்போதும் நடந்திராத வகையில் குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் ட்ராக்டர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். சிங்குவுக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குந்த்லி எல்லையிலிருந்து ஊர்வலம் தொடங்கவிருக்கிறது. “அதில் என் ட்ராக்டருடன் நான் கலந்து கொள்கிறேன்,” என்கிறார் அவர்.
ஹரியானாவின் சிங்கு மற்றும் திக்ரி, உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் ஆகியவை லட்சக்கணக்கான விவசாயிகளும் எண்ணற்ற விவசாய சங்கங்களும் போராடும் களங்களில் முக்கியமானவை. மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென போராட்டம் நடக்கிறது. “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, முதியவர்களோ இளையோரோ ஆண்களோ பெண்களோ இங்கிருந்து செல்வதாக இல்லை,” என்கிறார் சர்ப்ஜீத்.
“யாரும் என்னை இங்கு வரச் சொல்லவில்லை. யாரும் என்னை இங்கு பிடித்து வைக்கவில்லை,” என்கிறார் பிற ட்ராக்டர்களுடன் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும் அவரின் ட்ராக்ட்ரருகே நின்றபடி. “பல ஆண்கள் போராட்டத்துக்காக என் ட்ராக்டரில் வந்திருக்கின்றனர். அவர்களை நான் கூட்டி வந்தேன் என சொல்வீர்களா?” என பெண்களும் முதியவர்களும் போராட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர் என சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிக்கு (ஜனவரி 11 அன்று) பதிலளிக்கும் விதத்தில் சொன்னார்.






