“ஓ, நீங்கள் கொல்கத்தாவிலிருந்து வருகிறீர்களா?” என அவர் என்னை நிமிர்ந்து பார்த்து கண்கள் ஒளிரக் கேட்டார். “நானும் கொல்கத்தாவுக்கும் ஹவுராவுக்கும் சென்றிருக்கிறேன். பல முறை. ஒவ்வொரு தடவையும் வேலை தேடிச் சென்றிருக்கிறேன். சில நேரங்களில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சில நேரங்களில் கிடைத்ததில்லை. இறுதியில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.”
‘இங்கு’ என அவர் குறிப்பிடுவது கடல் மட்டத்திலிருந்து 10,000 அடி உயரத்தில் இருக்கும் லடாக்கை. ஜார்கண்டின் வீட்டிலிருந்து 2500 கிலோமீட்டர் தொலைவில் ராஜு மர்மூ இருக்கிறார். மாலை ஆனதும் திடுமென வானிலை மாறும் இமயமலையின் பாலைவனத்தில் இருக்கும் கூடாரத்துக்கு வெளியே பரிச்சயமான நகரத்தின் நினைவுகளை ஓட்டிப் பார்க்கிறார். மின்சாரமின்றி, ராஜு மற்றும் சக புலம்பெயர் தொழிலாளரின் கூடாரங்களை சற்று நேரத்தில் இருள் ஆக்கிரமித்துவிடும்.
ஜார்கண்டின் தும்கா மாவட்டத்திலிருந்து - பிற தொழிலாளர்களைப் போலவே - 31 வயது ராஜூவும் நாட்டிலேயே உயரமான இடத்தில் சாலைகள் போடும் வேலை செய்வதற்காக வருவது வழக்கம். ”இது நான்காவது வருடம். போன வருடமும் நான் வந்திருக்கிறேன். என்ன செய்வது? என் கிராமத்தில் வேலைகள் இல்லை,” என்கிறார் அவர். ராஜூவும் அவரின் மாநிலத்தை சேர்ந்த ஓர் ஒன்பது பேரும் சாலை போடும் தளத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி சிறு கூடாரங்களில் வசிக்கின்றனர். 17,582 அடி உயரத்தில் இருக்கும் (கர்தோங் கிராமம் அருகே இருக்கும்) கர்துங் லாவிலிருந்து 10,000 அடி உயரத்தில் இருக்கும் நுப்ரா பள்ளத்தாக்கு வரை அவர்கள் கணவாய் கட்டும் பணி செய்து கொண்டிருக்கின்றனர்.
வரலாற்றின் வணிகம், மதம் மற்றும் கலாசாரம் ஆகிய விஷயங்களுக்கு முக்கியமாக இருந்த லடாக் பகுதி ஜார்கண்ட், சட்டீஸ்கர், பிகார், மத்தியப் பிரதேஷ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து புலம்பெயரும் தொழிலாளர்களின் மையமாக வேகமாக மாறிக் கொண்டு வருகிறது. லடாக்கின் புது நிர்வாக அந்தஸ்து, லடாக்குக்குள் சாலைகள் அமைக்கும் பணியில் தனியார் கட்டட நிறுவனங்களை அனுமதித்திருக்கிறது. யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம், எல்லைச் சாலை நிறுவனத்துடன் இணைந்து, வணிக மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுப்படுத்தி இருக்கிறது. இதனால் லடாக்குக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
அவர்களை சாலையோரங்களில் நீங்கள் பார்க்க முடியும். அவர்களின் குடும்பங்களுடன் சில நேரங்களில் தென்படுவார்கள். 11 x 8.5 அடி கூடாரத்தில் இருப்பார்கள். சாலை வேலைகள் முன்னோக்கி போகும்போது இக்கூடாரங்களும் நகர்த்தப்படும். ஒவ்வொரு கூடாரத்திலும் ஏகப்பட்ட பைகள், உடைமைகள், பாத்திரங்கள் முதலியவை இருக்கும். கிட்டத்தட்ட 10 பேர் வசிப்பார்கள். குளிர்தரையில் வெறும் ஒரு கம்பளம் விரித்து படுப்பார்கள். மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர். கடும் குளிருடன் போராடுகின்றனர். பெரும்பாலும் மிகக் குறைந்த தட்பவெப்பத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் பணிபுரிகின்றனர். கொடூரமான காலநிலை, உள்கட்டமைப்பு திட்டங்களில் இருக்கும் அதிகமான செலவு மற்றும் தரம் குறைந்த இயந்திரங்களால் தொழிலாளர்களே அதிக எடைகளை தூக்கி சுமந்து சாலைகளை அமைக்கின்றனர். இவை யாவும் உயரமான, ஆக்சிஜன் குறைவான மலைப்பரப்பில் நேர்கின்றன. ஆனால் இக்கடுமையான பணிக்கு கொடுக்கப்படும் ஊதியம், குடும்பத்தை நடத்துவதற்கு போதாத அளவில் இருக்கிறது.























