முத்துராஜாவை சித்ரா முதன்முறையாக 2016ம் ஆண்டு, ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்தார். கண்டதும் காதல். முத்துராஜாவும் காதலில் விழுந்தார். ஆனால் அவரால் சித்ராவை பார்க்க முடியவில்லை. அவருக்கு பார்வை கிடையாது. சித்ராவின் குடும்பம் அவர்களின் காதலுக்கு எதிராக இருந்தது. மாற்றுத்திறனாளியை மணம் முடித்து வாழ்க்கையை சித்ரா நாசம் செய்து கொள்வதாக அவர்கள் வாதிட்டனர். இருவருக்கும் சேர்த்து சித்ராதான் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்றெல்லாம் சொல்லி பார்த்தனர். ஆனால் சித்ராவின் காதலை கலைக்க முடியவில்லை.
திருமணமான ஒரு மாதத்திலேயே சித்ராவின் குடும்பம் நினைத்தவை பொய்யானது. முத்துராஜாதான் சித்ராவை முழு நேரமாக கவனித்துக் கொண்டார். சித்ராவுக்கு இருதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை கொடிய பல திருப்பங்களை காணத் தொடங்கியது. எனினும் சோலாங்குருணி கிராமத்தில் வாழும் 25 வயது எம்.சித்ராவும் 28 வயது டி.முத்துராஜாவும் வாழ்க்கையை நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டனர். இது அவர்களின் காதல் கதை.



















