தூத்துக்குடி டவுனில் மக்கள் தெருக்களுக்கு வேகமாக வந்து நிறைந்தனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் அதே நிலைதான். ஒரு சிறுவனும் ஓடிச் சென்று அவர்களுடன் நின்று கொண்டான். சில கணங்களில் அவன் ஒரு போராட்டத்தின் அங்கமாக மாறியிருந்தான். தீவிரமான கோஷங்கள் எழுப்பினான். “அச்சூழலை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கவோ இப்போது உணரவோ வாய்ப்பில்லை,” என சொன்ன அவர், “பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் உணர்ச்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் திகைப்பில் இருந்தார்கள். பலர் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தனர்,” என்றார்.
“அப்போது எனக்கு 9 வயதுதான்,” என சிரித்துக் கொண்டார்.
இன்று அவருக்கு 99 வயது (ஜூலை 15, 2020). ஆனாலும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் தலைமறைவுகால புரட்சிக்காரராகவும் எழுத்தாளராகவும் அறிவாளியாகவும் அவரை உருவாக்கிய நெருப்பையும் மனநிலையையும் விட்டுவிடாமல் இன்னும் தக்க வைத்திருக்கிறார். பிரிட்டிஷ்ஷின் சிறையை விட்டு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வெளியே வந்தவர். “நீதிபதி நேரடியாக மத்தியச்சிறைக்கு வந்து எங்களை விடுதலை செய்தார். மதுரை சதி வழக்கிலிருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டோம். மதுரை மத்தியச்சிறையிலிருந்து வெளியே வந்ததுமே விடுதலைப் பேரணியில் கலந்து கொண்டேன்.”
நூறு வயதை அடையும் நிலையிலும் என்.சங்கரய்யா இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார். சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார். 2018ம் ஆண்டில் கூட சென்னையிலிருக்கும் குரோம்பேட்டையிலிருந்து பயணித்து மதுரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் பட்டப்படிப்பை முடிக்க முடியாமல் போனவர்தான், பல அரசியல் பிரதிகளையும் புத்தகங்களையும் கட்டுரைகளையும் பிறகு எழுதியிருக்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்து முடிக்கும் நிலையில் இருந்தார் நரசிம்மலு சங்கரய்யா. இரண்டு வாரங்களில் நடக்கவிருந்த இறுதித்தேர்வை 1941ம் ஆண்டில் அவரால் எழுத முடியவில்லை. “கல்லூரி மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்தேன்.” கல்லூரி வளாகத்திலேயே கவிதைக்குழு உருவாக்குமளவு படிக்கும் மாணவராக இருந்தவர் கல்லூரியின் கால்பந்து அணியிலும் விளையாடினார். அக்காலத்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சி எதிர்ப்புப் போராட்டங்களிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். “என்னுடைய கல்லூரி நாட்களில், இடதுசாரி சிந்தனை கொண்டிருந்த பலரின் நட்பு கிடைத்தது. சமூக சீர்திருத்தம் என்பது இந்தியச் சுதந்திரம் இல்லாமல் முழுமையடையாது என்பதை புரிந்துகொண்டேன்.” 17 வயதானபோது அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார் (கட்சி தடைசெய்யப்பட்டு தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்த காலம்).
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் அணுகுமுறை சாதகமாக இருந்ததாக நினைவுகூர்கிறார். “இயக்குநரும் சில ஆசிரியர்களும் மட்டும் அமெரிக்கர்களாக இருந்தனர். மற்ற அனைவரும் தமிழர்கள். அவர்கள் நடுநிலையாக இருக்க வேண்டிய கட்டாயம். பிரிட்டிஷ்ஷுக்கு ஆதரவாக அவர்கள் இருக்கவில்லை. மாணவர் நடவடிக்கைகள் அங்கு அனுமதிக்கப்பட்டன….” 1941ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் மீனாட்சி கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டது. “நாங்கள் துண்டுப்பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தோம். எங்களின் விடுதி அறைகள் சோதிக்கப்பட்டன. துண்டுப்பிரசுரம் வைத்திருந்ததற்காக நாராயணசாமி (என் நண்பர்) கைது செய்யப்பட்டார். அவருடைய கைதையும் கண்டித்து பிறகு நாங்கள் கூட்டம் நடத்தினோம்…








