“எப்போதெல்லாம் கொண்டாட்டம் இருக்கிறதோ அப்போதெல்லாம் நான் பாடல் இசைக்கத் தொடங்குவேன்.”
கோஹினூர் பேகத்தின் குழுவில் அவர் ஒருவர்தான் இருக்கிறார். அவரே இசையமைப்பார். தோல் இசைக்கருவி வாசிப்பார். “என் நண்பர்கள் கூடி கோரஸ் பாடுவார்கள்.” அவரின் உற்சாகமான பாடல்கள் உழைப்பு, விவசாயம் மற்றும் சாமானியரின் அன்றாட வேலைகள் ஆகியவற்றை பற்றி இருக்கும்.
அனுபவம் வாய்ந்த தொழிலாளர் நலன் செயற்பாட்டாளரும் கோஹினூர் அக்கா என முர்ஷிதாபாத் மாவட்டத்தின் அன்போடு அழைக்கப்படுபவருமான அவர், பெல்தாங்கா - I ஒன்றியத்தின் ஜானகி நகர் பிராத்மிக் வித்யாலயா ஆரம்பப்பள்ளியில் மதிய உணவு சமையலராக இருக்கிறார்.
“பால்ய காலத்திலேயே நான் கடினமான நாட்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் பசியும் தீவிர வறுமையும் என்னை நொறுக்கியதில்லை,” என்கிறார் எண்ணற்ற பாடல்களை உருவாக்கிய அந்த 55 வயதுக்காரர். வாசிக்க: வாழ்க்கையை, உழைப்பை பாடும் பீடித் தொழிலாளர் பாடல்கள்
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், பெரும்பாலான பெண்கள் குடும்பங்களுக்காக பீடி சுருட்டும் வேலை செய்கின்றனர். ஒரே இடத்தில் பல மணி நேரங்களாக குனிந்தமர்ந்து நச்சுப் பொருளை கையாளுவது அவர்களின் ஆரோக்கியத்தில் தீவிர, மீள முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. பீடி சுருட்டும் வேலையும் செய்கிற கோஹினூர் அக்கா, அந்த ஊழியர்களுக்கான நல்ல பணிச்சூழல் மற்றும் தொழிலாளர் உரிமை பெறுவற்கான களத்தில் முன்னணி வகிக்கிறார். வாசிக்க: புகைமயமாகும் பெண் பீடித் தொழிலாளர்களின் ஆரோக்கியம்
“என்னிடம் நிலம் இல்லை. மதிய உணவு சமைக்கும் வேலையில் எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதை சொல்லாமல் இருப்பதே நல்லது. ஏனெனில், தினக்கூலி வேலை செய்பவருக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவு அது. என் கணவர் (ஜமாலுதீன் ஷேக்) குப்பை சேகரிக்கும் வேலை செய்கிறார். எங்களின் மூன்று குழந்தைகளை (கஷ்டத்துடன்) வளர்த்துவிட்டோம்,” என்கிறார் அவர், ஜானகி நகரிலுள்ள அவர் வீட்டில்.
நாங்கள் இருக்கும் மாடிப்பகுதிக்கு ஒரு குழந்தை படிக்கட்டில் தவழ்ந்தேறி வருவதைக் கண்டதும் அவரது முகம் பிரகாசமடைகிறது. கோஹினூர் அக்காவின் ஒரு வயது பேத்தி அது. பாட்டியின் மடிக்கு குழந்தை தாவுகிறது. பாட்டியின் முகத்தில் பெரும் புன்னகை அரும்புகிறது.
“வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். பயம் கொள்ளக் கூடாது. நம் கனவுகளுக்காக நாம் போராட வேண்டும்,” என்கிறார் அவர் குழந்தையின் சிறு கையை, உழைப்பால் இறுகியிருக்கும் தன் கைகளில் ஏந்தியபடி. “என் குழந்தைக்குக் கூட இது தெரியும்.. சரிதானம்மா?”
“உங்களின் கனவுகள் என்ன, அக்கா?” எனக் கேட்கிறோம்.
“என் கனவுகள் பற்றிய பாடலைக் கேளுங்கள்,” என்கிறார்.


