”பள்ளிக்கு செல்வதற்கு முன் இந்த வேலைகளை நான் செய்தாக வேண்டும். வேறு யார் செய்வார்?” என தாய்மாட்டின் பாலை குடிக்க கன்றை கழற்றியபடி 15 வயது கிரண் கேட்கிறார். அவரது ஓரறை வீட்டில் நோய்வாய்ப்பட்ட தாயும் தம்பி ரவியும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். வீட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் அவர் கன்றை மீண்டும் தொழுவத்தில் கட்ட வேண்டும். பிறகு அவரது தாத்தா பசுவில் பால் கறப்பார்.
வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்டாலும் இன்று கிரண் வேலை பார்க்கவும் போவதில்லை. பள்ளிக்கு செல்லவும் போவதில்லை. அவருக்கு இது மாதவிடாயின் முதல் நாள். உடல் மிகவும் பலவீனமாக இருக்கும். தொற்றுக்கு பிறகு அவரின் வயிற்று வலி இன்னும் மோசமடைந்திருக்கிறது. ஆனாலும் அவர் வீட்டு வேலைகளை காலை 6.30 மணிக்கு முன்னரே முடித்துவிட வேண்டும். “பள்ளிக்கூடத்தில் காலை கூடுகை 7 மணிக்கு தொடங்கும். பள்ளிக்கு நான் நடந்து செல்ல 20-25 நிமிடங்கள் பிடிக்கும்,” என்கிறார் அவர்.
கிரண் தேவி 11ம் வகுப்பு படிக்கும் அரசாங்கப் பள்ளி உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்திலுள்ள கர்வி தாலுகாவின் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு. அவர் அங்கு தம்பி ரவி, 40 வயது தாய் பூனம் மற்றும் 67 வயது தாத்தா குஷிராம் ஆகியோருடன் வசித்து வருகிறார். வீட்டுக்கு பின் இருக்கும் 800 சதுர அடி நிலத்தை தாத்தா பார்த்துக் கொள்கிறார். அங்கு அவர்கள் கோதுமை, சுண்டல் மற்றும் சில காய்கறிகள் போன்றவற்றை விளைவிக்கின்றனர். பூனத்துக்கு கை மூட்டுகளிலும் கால் மூட்டுகளிலும் கடுமையான வலி உண்டு. அதனால் அவர் வீட்டில் வேலை பார்ப்பது குறைவுதான். விளைவாக கிரணுக்கு அதிக பொறுப்புகள் சுமத்தப்படுகின்றன.
கிரணின் அன்றாட வேலைகள் தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. “இந்த சிறு வேலைகளை செய்வதில் எனக்கு பிரச்சினை இல்லை. மாதவிடாய் வலி வருகையில்தான் பிரச்சினை ஆகிறது.”












