மகாராஷ்டிர நாசிக் மாவட்டத்திலிருக்கும் வீட்டிலிருந்து 2019ம் ஆண்டில் செம்மறி மேய்க்கும் வேலைக்கு பாருவை அவரது அப்பா அனுப்பியபோது பாருவுக்கு 7 வயது.
மூன்று வருடங்கள் கழித்து ஆகஸ்டு மாத பிற்பகுதியில், குடிசைக்கு வெளியே அவரை அவரது பெற்றோர் கண்டெடுத்தனர். மூர்ச்சையாகி இருந்த அவர், ஒரு போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து நெறிக்கப்பட்ட தடங்கள் இருந்தன.
“அவளின் கடைசி மூச்சு வரை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்ன ஆனது என அவளை கேட்க முயன்றோம், ஆனால் அவளால் பேச முடியவில்லை,” என்கிறார் பாருவின் தாயான சவிதாபாய் கண்ணீரை துடைத்துக் கொண்டே. “யாரோ அவளுக்கு சூனியம் வைத்துவிட்டார்களேன நாங்கள் நினைத்தோம். எனவே அவளை அருகே இருந்த மொரா மலைக்கோவிலுக்கு (மும்பை - நாசிக் நெடுஞ்சாலைக்கு அருகில்) அழைத்துச் சென்றோம். பூசாரி அவளுக்கு திருநீறு பூசினார். அவள் நினைவுதிரும்ப எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் நினைவு திரும்பவில்லை,” என நினைவுகூருகிறார் சவிதாபாய். அவர் கண்டெடுக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 2, 2022 அன்று, நாசிக் மருத்துவமனையில் காயங்களால் பாரு இறந்து போனார்.
பாரு வேலை பார்த்திருந்த காலத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை குடும்பத்தைப் பார்க்க வருவார். அவரை கூட்டிச் சென்ற தரகரால் ஒன்றரை வருடங்களுக்கு முன் அவர் வீட்டுக்குக் கூட்டி வரப்பட்டார். “7 அல்லது 8 நாட்கள் வரை அவள் எங்களுடன் வாழ்ந்தாள். எட்டாம் நாள் கழிந்ததும் அந்த நபர் வந்து பாருவை மீண்டும் அழைத்துச் சென்றார்,” என பாரு மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த நாள் தரகருக்கு எதிராக சவிதாபாய் கொடுத்த காவல்துறை புகாரில் தெரிவித்திருந்தார்.











