”ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தபோது கிடைக்கும் வேலை எல்லாவற்றையும் செய்தோம். மகளுக்கு நல்ல கல்வி வழங்க தேவையான பணத்தை ஈட்ட விரும்பினோம்,” என்கிறார் குட்லா மங்கம்மா. அவரும் அவரது கணவரான குட்லா கோட்டையாவும் 2000மாம் ஆண்டில் தெலெங்கனாவின் மஹ்பூப் நகர் மாவட்டத்திலிருந்த அவர்களின் கிராமத்திலிருந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தனர். முதல் குழந்தையான கல்பனா பிறந்தவுடன் இது நடந்தது.
ஆனால் நகரம் அவர்களுக்கு நல்லபடியாக இருக்கவில்லை. வேலை ஏதும் கிடைக்காததால் கோட்டையா வருமானம் ஈட்ட தூய்மைப் பணி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். சாக்கடை கால்வாய்களை சுத்தப்படுத்தும் வேலை செய்யத் தொடங்கினார்.
கோட்டையாவின் பாரம்பரியத் தொழிலான துணித் துவைக்கும் பணியை ஹைதராபாத்தில் யாரும் கொடுக்கவில்லை. அவர் சக்கலி சமூகத்தை (தெலெங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சமூகம் அது) சேர்ந்தவர். “எங்களின் முன்னோர்கள் துணி துவைத்து இஸ்திரி போடும் வேலை செய்தார்கள். ஆனால் இப்போது எல்லாரும் சலவை இயந்திரங்களும் இஸ்திரி பெட்டிகளும் வாங்கி விடுவதால் எங்களுக்கு குறைவாகவே வேலை கிடைக்கிறது,” என வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தை சுட்டிக் காட்டுகிறார் மங்கம்மா
கட்டுமானத் தளங்களின் தினக்கூலி வேலைகளுக்கும் முயன்று பார்த்தார் கோட்டையா. “கட்டுமானத் தளங்கள் எப்போதுமே வீட்டிலிருந்து தூரத்தில்தான் இருக்கும். அங்கு பயணிக்கவே அவர் செலவு செய்ய வேண்டும். தூய்மைப் பணி வீட்டுக்கருகேயே கிடைப்பதால், அந்த வேலையைச் செய்யத் தொடங்கினார் அவர்,” என்கிறார் மங்கம்மா. இந்த வேலையை வாரத்துக்கு மூன்று முறை அவர் செய்ததாக சொல்கிறார். அந்த வேலையில் நாளொன்றுக்கு 250 ரூபாய் வருமானம் ஈட்டினார்.
2016ம் ஆண்டின் மே மாதத்தில்கோட்டையா வீட்டை விட்டு 11 மணிக்குக் கிளம்பிச் சென்ற ஒரு காலையை நினைவுகூருகிறார் மங்கம்மா. மலக்குழி ஒன்றை சுத்தப்படுத்தச் செல்வதாக சொன்ன அவர், திரும்பும்போது சுத்தப்படுத்திவிட்டு வீட்டுக்குள் வரும் வகையில் வீட்டுக்கு வெளியே ஒரு பக்கெட் நீர் வைக்குமாறு சொன்னார். “என் கணவர் நகராட்சியின் தூய்மைப் பணியாளர் அல்ல. பணம் தேவைப்பட்டதால்தான் அவர் அந்த வேலையைச் செய்தார்,” என்கிறார் மங்கம்மா.














