சோகன் சிங் டிடாவின் மரணத்துக்கு எதிரான மனோபாவம் பல வாழ்க்கைகளை நிலத்திலும் நீரிலும் காப்பாற்றியிருக்கிறது. புலே சக் கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் புகை மற்றும் தூசுப்படலத்திலிருந்து ஒரு கடவுளைப் போலதான் அவர் வெளிப்படுவார். தன் மோட்டார் பைக்கில் காய்கறிகளை விற்க வருவார். ஆனால் முக்குளிக்கும் திறமைக்குதான் அவர் பிரபலம். பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு அருகே இருக்கும் அவரது ஊருக்கு அருகே உள்ள நீர்ப்பாசன கால்வாய்களில் குதித்து பாதுகாப்பாக மக்களை கரைக்குக் கொண்டு வந்து சேர்ப்பார்.
“நீரில் மூழ்குபவர்களை காப்பாற்றுவது என் வேலை இல்லை. ஆனாலும் நான் செய்கிறேன்,” என்கிறார் 42 வயது சோகன். கடந்த 20 வருடங்களாக இதை அவர் செய்து வருகிறார். “‘நீர்தான் வாழ்க்கை’ என நினைப்பீர்கள். ஆனால் அது மரணத்தையும் தரும் என்பதை நான் ஓராயிரம் முறை பார்த்திருப்பேன்,” என்கிறார் சோகன் இத்தனை வருடங்களில் அவர் கரைக்கு சேர்ப்பித்த சடலங்களை குறித்து.
குர்தாஸ்பூரிலும் அதன் அண்டை மாவட்டமான பதான்கோட்டிலும் கால்வாயில் யாரேனும் விழுந்து விட்டால் முதலில் அழைக்கப்படுபவர் சோகன்தான். அது விபத்தா அல்லது தற்கொலையா என யோசிக்காமல், “தண்ணீரில் விழுந்துவிட்டார் என்றதும் நான் நீரில் இறங்கி விடுவேன். அவர் உயிரோடு இருக்க விரும்புவேன்,” என்கிறார் சோகன். இறந்து போயிருந்தால், “உறவினர்கள் அவரின் முகத்தை இறுதியாக பார்க்க விரும்புவேன்,” என்கிறார் அவர் நிதானமாக. ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பு அவரின் கூற்றை நிறைக்கிறது.
குறைந்தது 2-3 சடலங்களையேனும் சோகன் ஒரு மாதத்தில் கால்வாயிலிருந்து வெளியே எடுக்கிறார். அவருடைய அனுபவத்தை தத்துவப்பூர்வமாக சொல்கிறார், “வாழ்க்கை ஒரு சூறாவளி போல. ஒரே நேரத்தில் தொடங்கி முடியும் வட்டம் அது,” என.









