ஒவ்வொரு நாள் காலையும் மொத்த ஷேக் குடும்பமும் வேலைக்கு கிளம்பி விடும். மத்திய ஸ்ரீநகரின் பதாமலூ பகுதியின் குப்பத்திலிருந்து காலை 9 மணிக்கு பாத்திமா கிளம்பி விடுவார். மாலை 5 மணி வரை சுமார் 20 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகளை சேகரிப்பார். அவருடைய கணவர் முகமது குர்பான் ஷேக் சில நேரங்களில் நகர எல்லைகளையும் தாண்டி 30 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள டவுன்களுக்கும் கிராமங்களுக்கும் குப்பைகள் சேகரிக்கச் செல்வார். பாத்திமா பயன்படுத்தும் மூன்று சக்கர சைக்கிள் ரிக்ஷாவை போன்ற வாகனத்தில் டெம்போ போன்ற பகுதியை இணைத்து ஓட்டிச் செல்வார். 17லிருந்து 21 வரையிலான வயதுகளில் இருக்கும் மகள் மற்றும் இரு மகன்களும் கூட ஸ்ரீநகரில் குப்பை சேகரிக்கின்றனர்.
ஐந்து பேரும் சேர்ந்து ஸ்ரீநகரின் வீடுகள், உணவு விடுதிகள், கட்டுமான தளங்கள், காய்கறி மண்டிகள் மற்றும் இன்னும் பிற பகுதிகளிலிருந்து கொட்டப்படும் 450-500 டன் குப்பையின் ஒரு சிறுபகுதியை அகற்ற உதவுகின்றனர். ஸ்ரீநகரின் மாநகராட்சி அலுவலகம் குறிப்பிடும் அளவு அது.
நகராட்சி ஆணையரான அதர் அமிர் கான் சொல்வதன்படி நகராட்சியின் கீழ் முழு நேரமாகவும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் நகரத்தின் குப்பைகளை அகற்றும் வேலையை செய்யும் 4000 தூய்மைப் பணியாளர்களில் ஷேக்கின் குடும்பமும் பிற குப்பை சேகரிப்பாளர்களும் இல்லை. “ஆனாலும் குப்பை சேகரிப்பவர்கள் எங்களின் சிறந்த நண்பர்கள்,” என்கிறார் ஸ்ரீநகர் நகராட்சியின் தலைமை துப்புரவுத்துறை அதிகாரியான நசீர் அகமது. “100 வருடங்கள் ஆனாலும் அழிந்துபோகாத குப்பைகளை அவர்கள் அகற்றுகின்றனர்.”
குப்பை சேகரிப்பவர்கள் சுயதொழில் செய்பவர்கள் மட்டுமில்லை. எந்தவித பாதுகாப்பும் கூட இல்லாமல் அவர்கள் பணிபுரிகிறார்கள். கோவிட் தொற்றுக்காலம் அவர்களுக்கு இன்னும் அதிக அபாயம் கொடுக்கும் சூழலை கொடுத்திருக்கிறது. “நான் மீண்டும் வேலைக்கு (ஜனவரி 2021-ல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டபோது) கடவுளை நம்பி செல்லத் தொடங்கினேன். என்னுடைய குடும்பத்துக்கான வருமானம் ஈட்டவென நியாயமான காரணங்களுடன் பணிக்கு செல்கிறேன். எனக்கு தொற்று ஏற்படாது என எனக்குத் தெரியும்…” என்கிறார் 40 வயது பாத்திமா.






















