சிறு கட்டி கெட்டியாகிவிட்டது என்கிறார் ப்ரீத்தி யாதவ்.
வலது மார்பகத்தில் இருந்த வீக்கம் ஜூலை 2020ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாட்னாவில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு பயாப்ஸி என்கிற திசுச் சோதனையும் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டுமென்றும் சொல்லி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் ப்ரீத்தி மீண்டும் மருத்துவமனைக்கு செல்லவே இல்லை.
“விரைவில் அதை செய்து விடுவோம்,” என்கிறார் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர். முற்றமும் மூலிகைச் செடிகளும் கொண்ட பெரிய வீட்டின் தாழ்வாரத்தில் அவர் அமர்ந்திருக்கிறார்.
அவரின் வார்த்தைகள் மென்மையாக சோர்வுடன் வெளிப்பட்டது. சமீப வருடங்களில் அவரின் குடும்பத்திலிருந்து குறைந்தபட்சம் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருக்கிறார்கள். மார்ச் 2020ல் கோவிட் தொற்று தொடங்குவதற்கு முன், பிகாரின் சரன் மாவட்டத்தில் இருக்கும் சோனெப்பூர் ஒன்றியத்தில் அமைந்திருக்கும் அவரின் ஊரில் பலவகை புற்றுநோய் பாதிப்புகள் சில வருடங்களில் பதிவாகியிருந்தன. (அவரின் வேண்டுகோளின்படி ஊரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவரின் உண்மையான பெயரும் பயன்படுத்தப்படவில்லை.)
கட்டியை அறுவை சிகிச்சை மூலம் எப்போது அகற்றுவது என 24 வயது ப்ரீத்தி தனியாக முடிவெடுக்க முடியாது. அவரின் குடும்பம் அவரை மணம் முடித்துக் கொடுக்கும் முயற்சியில் இருக்கிறது. ராணுவத்தில் பணிபுரியும் பக்கத்து ஊர் இளைஞனுக்கு அநேகமாக மணம் முடித்து வைப்பார்கள். “திருமணம் முடிந்த பிறகு கூட அறுவை சிகிச்சை செய்யலாம் இல்லையா? குழந்தை பிறந்தால் அந்த கட்டி மறைந்து போகும் வாய்ப்பும் இருப்பதாக மருத்துவர் கூறினார்,” என்கிறார் அவர்.
ஆனால் அவர்கள் மணமகனின் குடும்பத்திடம் கட்டியை பற்றியோ அறுவை சிகிச்சை பற்றியோ குடும்பத்தில் பலருக்கு புற்றுநோய் இருக்கும் தகவல் பற்றியோ சொல்வார்களா? “அதை பற்றி எனக்கு புரியவில்லை,” என்கிறார். அவரின் அறுவை சிகிச்சை இச்சிக்கலை சார்ந்தே இருக்கிறது..








