பழம்பெரும் நகரமான அகமதாபாத்தின் நெரிசல் நிறைந்த சந்துகளில் சமீருதின் ஷேக் ஒருநாளுக்கு இருமுறை தனது மிதிவண்டியில் சென்று வருகிறார். ஜூஹாபுராவில் இருக்கும் தனது பணியிடத்திற்கு ஃபதேஹ்வாடியில் இருக்கும தனது வீட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தூரம் நாள்தோறும் பயணம் செய்கிறார். ஒரு முறை செல்ல அவருக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. “என்னிடம் மோட்டார் வண்டி கிடையாது. என்னால் பெட்ரோலுக்கு செலவு செய்ய முடியாது, ” என்று தனது மிதிவண்டியை நிறுத்தியபடி சொல்கிறார் 36 வயதாகும் அவர்.
காதியா எனும் பகுதியில் இருக்கும் வணிக வளாக அடிதளத்தில் 10 x 20 அறையில் அவரது வேலைநாள் தொடங்கி முடிகிறது. அவருடன் மேலும் 10 பேர் காகித உறை தயாரிப்பு வேலையை செய்கின்றனர். மிகச் சிறப்பாக ஒரே நாளில் 6000 முதல் 7000 உறைகளை அவர் தயாரித்துள்ளார்.
உறை தயாரிப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. “இக்கைவினையை கற்க ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும்,” என்கிறார் சமீருதின். “தனிப்பட்ட தொழிலாளியாக, தனியாக ஊதியம் பெறுவதற்கு உஸ்தாத்(மூத்த கைவினைஞர் மற்றும் வழிகாட்டி) வேலையின் தரத்தை ஏற்று முத்திரையிட வேண்டும்,” என்று அவர் விளக்குகிறார்.
இங்கே தரம் என்பது வேகம், துல்லியம், சாமர்த்தியம் மற்றும் கருவிகள் குறித்த அறிவு ஆகியவற்றின் கலவையாகும். ஒவ்வொரு பணிமனையிலும் வெட்டுதல், துளையிடுதல் ஆகிய இரு பணிகளுக்கு மட்டுமே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற அனைத்து வேலைகளையும் கைகளால் செய்கின்றனர்.
இயந்திரங்களை பட்டறை உரிமையாளர்கள் மட்டுமே இயக்குகின்றனர். வெவ்வேறு அளவிலான உறைகளுக்காக பெரிய காகித அட்டைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் வெட்டப்பட்டு, சிறப்பு வண்ணங்கள் கொண்டு பூசப்படுகின்றன. தொழிலாளர்கள் ஒரு சமயத்தில் 100 காகிதங்களை எண்ணி எடுத்து மடித்து, ஒட்டி, மூடி கட்டுகின்றனர்.
































