கைகளிலும், உடலிலும் சங்கிலியால் கால்கள் வரை பிணைத்தபடி அவர் நடக்கிறார். வெள்ளை நிறத்தின் மீது கருப்பு கோடுகள் போட்ட முழங்கால் வரையிலான சட்டை, சிறைவாசியைப் போன்றே தோற்றமளிக்கிறது.
ஆனால் 42 வயதாகும் கபால் சிங் சிறை தண்டனைக்கு உள்ளாகும் அளவுக்கு எந்த குற்றமும் செய்யவில்லை. சங்கிலியை உடலில் தானே பிணைத்துக் கொண்டுள்ளார். பஞ்சாபின் ஃபசிகா மாவட்டம் ருக்கான்புராவைச் (குய் கெரா என்றும் அறியப்படுகிறது )சேர்ந்தவர் இந்த விவசாயி.
2020 ஜூன் 5ஆம் தேதி அவசர சட்டங்களாக அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு, அதே மாதம் 20ஆம் தேதி அவசர அவசரமாக சட்டங்களாக இயற்றப்பட்ட மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்க்கும் லட்சக்கணக்கான விவசாயிகளில் இவரும் ஒருவர்.
உடலில் ஏன் இந்த சங்கிலி பிணைப்பு?
“விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராடி வருகின்றனர், என்னால் அவர்களது வலியைத் தாங்க முடியவில்லை. அவர்களின் துயரத்தைப் பிரதிபலிக்கும் நோக்கில் என் உடல் முழுவதும் சங்கிலியால் பிணைத்துள்ளேன். அவர்கள் உள்ளுக்குள் உணர்வதை நானும் உணர்கிறேன்.”
“என்னைச் சுற்றியுள்ள சங்கிலியைப் பார்க்கும்போது, எங்களைச் சுற்றியுள்ள அனைவர் மீது சங்கிலி சுற்றப்பட்டுள்ளதை நீங்கள் உணரலாம். நீங்கள் அவற்றை பார்க்க வேண்டும்.” வரவேற்பைப் பெறாத இச்சட்டங்களையும் இச்சங்கிலியில் இணைந்துள்ளதாக கருதுகிறார் கபால் சிங்.




