தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் முகமதுபூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு முகேஷ் ராம் வந்திருந்தார். அவர் இமாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
தீபாவளிக்கு பிறகு ஆறாவது நாள் நடைபெறும் சாட் பூஜையில் பங்கேற்பதற்காக அந்த 40 வயதுக்காரர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். அவரது வருகையால் மனைவி பிரபாபதி தேவி மற்றும் நான்கு பிள்ளைகளும் மகிழ்ந்தனர்
அவரது வீட்டிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கல்பூர் புரானா பசாரின், கட்டுமான தளத்தில் தினக்கூலி வேலைக்கு சேர்ந்தார். காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் அவர் மாலை 6 மணிக்கு வீடு திரும்புவார்.
2021 நவம்பர் 2ஆம் தேதி தாமதமாக வீடு திரும்பிய அவர் தலைவலி மண்டையை உடைப்பதாக தெரிவித்தார்.
வலி கடுமையானதால் அடுத்தநாள் காலையில் அவரால் கண்களைக் கூட திறக்க முடியவில்லை. ஓரளவு சமாளித்து வேலைக்கு தயாரானாலும் முகேஷின் உடல்நிலை மோசமானது.
அவரது உடல்நிலையை கண்ட பிரபாபதி 35 கிலோமீட்டர் தொலைவில் கோபால்கஞ்சில் உள்ள மருத்துவமனைக்கு வாடகை காரில் அழைத்துச் சென்றார். “சுபேரே லே ஜாத், லே ஜாத், 11 பஜே மவுகத் ஹோ கைல் [காலையில் மருத்துவமனையை அடைந்தபோது அவர் இறந்துவிட்டார். அப்போது 11 மணி இருக்கும்].”
35 வயது கைம்பெண் பிரபாபதி, இறந்த கணவரின் உடலோடு வீடு திரும்பிய போது, வீடு சீல் வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். முஹம்மதுபூர் காவல்நிலைய அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.










