“உங்களிடம் என்ன சொல்வது? என் முதுகு உடைந்து, இடுப்பு எலும்புகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன,” என்கிறார் பிபாபாய் லோயாரி. “என் அடிவயிறு பள்ளமாகி, என் வயிறு முதுகுடன் ஒட்டிக்கொண்டு 2-3 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் எலும்புகளில் ஓட்டை விழுந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார்.”
முல்ஷி வட்டாரத்தில் உள்ள ஹதாஷி கிராமத்தில் அவரது வீட்டின் அருகே தகர அட்டை அடைக்கப்பட்ட அரை இருள் சமையலறையில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். 55 வயதாகும் பிபாபாய் மண் அடுப்பில் சட்டியை வைத்து, மிச்சமுள்ள அரிசியை கழுவி வேக வைக்கிறார். மரப் பலகை கொடுத்து என்னை அமரச் சொல்லிவிட்டு, தனது அன்றாட பணிகளை அவர் தொடர்கிறார். சமைக்கும் போது அவரது இடுப்பு முற்றிலுமாக வளைந்து தாடை முழங்கால்களை தொடுவதை கண்டேன். கால்களை மடக்கி அமரும்போது அவரது முழங்கால்கள் காதுகளைத் தொடுகின்றன.
கடந்த 25 ஆண்டுகளில் எலும்புப்புரையும் நான்கு அறுவை சிகிச்சைகளும் பிபாபாயை இப்படிச் செய்துவிட்டன. முதலில் குடும்ப கட்டுப்பாடு, பிறகு குடலிறக்கம், கருப்பை நீக்கம், குடல் - அடிவயிற்றுக் கொழுப்பு, தசைகளின் ஒரு பகுதி அகற்றம் என நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
“வயதிற்கு வந்தவுடன் 12 அல்லது 13 வயதிலேயே எனக்கு திருமணமாகிவிட்டது. முதல் ஐந்தாண்டுகள் நான் கருத்தரிக்கவே இல்லை,” என்கிறார் பிபாபாய். அவர் பள்ளிக்கும் செல்லவில்லை. அவரது கணவர் மகிபட்டி லோயாரியை அனைவரும் அப்பா என்றழைக்கின்றனர் - அவர் பிபாபாயைவிட 20 வயது மூத்தவர். மாவட்ட பஞ்சாயத்து பள்ளியின் ஓய்வுப் பெற்ற ஆசிரியர். அவர் புனே மாவட்டம், முல்ஷி வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் பணியாற்றியவர். லொயாரி குடும்பம் தங்களுக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் நெல், பயறு, பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை பயிரிடுகின்றனர். அவர்களுக்கு என இரண்டு காளைகள், ஒரு எருமை, ஒரு பசு, கன்று ஆகியவை சொந்தமாக உள்ளன. மாடுகளிடம் பால் கறந்து கூடுதல் வருமானம் பெறுகின்றனர். மகிபட்டி ஓய்வூதியமும் பெறுகிறார்.
“என் எல்லா குழந்தைகளும் வீட்டிலேயே பிறந்தனர்,” என்று தொடர்கிறார் பிபாபாய். அவரது முதல் மகன் 17 வயதில் பிறந்துள்ளான். “அப்போது எங்கள் கிராமத்தில் சரியான சாலை வசதி, வாகன வசதி கிடையாது. என் பெற்றோர் வீட்டிற்கு மாட்டு வண்டியில் செல்லும் வழியில், எனது பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி வந்துவிட்டது, மாட்டு வண்டியிலேயே என் முதல் குழந்தை பிறந்துவிட்டது!” என பிபாபாய் நினைவுக்கூர்கிறார். பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசலை பிறகு தைத்துள்ளனர் - இதுபற்றி அவர் கூறவில்லை.







