ராணி மஹ்தோ ஊசலாட்டத்தில் இருந்தார். சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்த சந்தோஷம் ஒரு பக்கம். பிறந்திருப்பது மீண்டும் ஒரு பெண்குழந்தை என கணவனிடம் சொல்ல வேண்டுமே என்கிற தயக்கம் மறுபக்கம்.
“மகனைதான் இம்முறை அவர் எதிர்பார்த்தார்,” என்கிறார் பதட்டத்துடன். “வீட்டுக்கு திரும்புகையில் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தைதான் என்பதை அவரிடம் எப்படி சொல்வதென கவலையாக இருக்கிறது,” என்கிறார் 20 வயதாகும் அவர். பிகாரின் பட்னா மாவட்டத்தில் இருக்கும் தனப்பூர் மருத்துவமனையின் படுக்கையில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார்.
2017ம் ஆண்டில் திருமணமானபோது அவருக்கு வயது 16. முதல் மகளை திருமணம் ஆனதுமே பெற்றெடுத்தார் ராணி. அச்சமயத்தில் அவரின் கணவர் பிரகாஷ் குமார் மஹ்தோவுக்கு வயது 20. பிரகாஷ் மற்றும் மாமியாருடன் கிராமத்தில் வாழ்கிறார் அவர். கிராமத்தின் பெயரை அவர் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.
”எங்களின் கிராமத்தில் பெரும்பாலான பெண்களுக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்துவிடும்,” என்கிறார் இளவயதிலேயே திருமணம் முடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அறியாத ராணி. “எனக்கு ஒரு தங்கையும் இருக்கிறாள். என் பெற்றோர் அவளை சீக்கிரமே மணம் முடித்துக் கொடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்,” என்கிறார். அவரின் மாமியாரான கங்கா மஹ்தோவும் அவரருகே வந்து அமர்ந்தார். வெளியேறுவதற்கான சான்றிதழ் பெற காத்திருந்தார்.
ராணியும் அவரின் தங்கையும் விதிவிலக்குகள் இல்லை. நாட்டில் நிகழும் குழந்தை மற்றும் இளவயது திருமணங்களில் 55 சதவிகித திருமணங்களுக்கு பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே காரணமாக இருப்பதாக ஓர் ஆய்வில் குழந்தைகள் உரிமைகளுக்கான தொண்டு நிறுவனம் CRY குறிப்பிடுகிறது.
“வெளியேறுவதற்கான அனுமதி ரசீது கிடைத்ததும் ஊருக்கு செல்ல ஓர் ஆட்டோவை பிடிப்போம்,” என்கிறார் ராணி. “தேவைக்கும் இரண்டு நாட்கள் அதிகமாகவே அவர் மருத்துவமனையில் இருந்துவிட்டார். அவருக்கு வேறு பிரச்சினைகளும் இருந்தன. “எனக்கு ரத்த சோகை குறைபாடு இருக்கிறது,” என்கிறார் ராணி.







