பல்லவி கவிட் ஐந்து மாத கர்ப்பிணி. கட்டிலில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக வலி தாளாமல் நெளிந்து கொண்டிருந்தார். அவருடைய நாத்தனார் சப்னா கரெல் 45 வயதானவர். பல்லவியின் கருப்பை பெண்ணுறுப்பிலிருந்து வெளியே விழுந்தபோது அருகே இருந்தார். கருப்பையில் ஐந்து மாத உயிரற்ற சிசு இருந்தது. ரத்தமும் கசிவுகளும் தரையில் சொட்ட வலி தாங்க மாட்டாமல் பல்லவி நினைவிழந்தார்.
2019ம் ஆண்டின் ஜூலை 25ம் தேதி அதிகாலை 3 மணி. சத்புத மலைகளில் 55 பில் குடும்பங்கள் வாழும் ஹெங்க்லபாணி என்ற குக்கிராமத்திலிருந்த பல்லவியின் குடிசையை மழை அடித்துக் கொண்டிருந்தது. வடமேற்கு மகாராஷ்டிராவில் இருக்கும் நந்துர்பரின் மாவட்டத்தில் யாராலும் எளிதில் வந்தடைய முடியாத ஊர். கற்சாலைகள் கிடையாது. மொபைல் நெட்வொர்க் கிடைக்காது. “அவசர நிலைகள் நாம் அழைத்து வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் அவை வரும்,” என்கிறார் பல்லவியின் கணவர் கிரிஷ் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). “மொபைல் நெட்வொர்க் கிடைக்காமல் நாங்கள் மருத்துவரையோ ஆம்புலன்ஸ்ஸையோ எப்படி அழைக்க முடியும்?”
“நான் மிகவும் பயந்து போய் விட்டேன்,” என்னும் 30 வயது கிரிஷ் “அவள் இறந்துவிடக் கூடாது என நினைத்தேன்” என நினைவுகூர்கிறார். அதிகாலை 4 மணி இருளிலும் மழையிலும் சில மூங்கில்கள் மற்றும் போர்வைகள் கொண்டு ஸ்ட்ரெச்சர் உருவாக்கியிருக்கிறார்கள். 105 கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தட்கோனுக்கு பல்லவியை சேறும் சகதியும் நிறைந்த சத்புத மலைப் பாதைகளில் கிரிஷ்ஷும் பக்கத்து வீட்டுக்காரரும் சுமந்துச் சென்றனர்.
அக்ரனி தாலுகாவிலுள்ள டோரன்மல் கிராமப் பஞ்சாயத்தில் ஹெங்க்லபாணி கிராமம் இருக்கிறது. டோரன்மல் கிராம மருத்துவமனை பக்கம்தான். ஆனால் இரவு நேரத்தில் அங்கு செல்வது பாதுகாப்பு கிடையாது. வெறுங்கால்களில், கிரிஷ்ஷும் அவரின் அண்டை வீட்டுக்காரரும் சகதிப் பாதைகளில் தடுமாறிக் கொண்டு பிளாஸ்டிக் கவரால் போர்த்தப்பட்டிருந்த பல்லவியை கொண்டுச் சென்றார்கள். வலியில் முனகிக் கொண்டிருந்தார் பல்லவி.
டோரன்மல் கணவாய்ப்பாதையை அடையவே மூன்று மணி நேரங்களாக மலையேறிக் கொண்டிருந்தனர். “30 கிலோமீட்டர்கள் மேலே ஏற வேண்டும்,” என்கிறார் கிரிஷ். அங்கு 1000 ரூபாய்க்கு ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து தட்கோன் கிராமத்துக்கு சென்றார்கள். ஐந்து மணி நேரப் பயணத்துக்கு பிறகு தட்கோனிலிருந்து ஒரு தனியார் மருத்துவமனையில் பல்லவியை சேர்த்திருக்கிறார்கள். அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். “என் கண்ணில் பட்ட முதல் மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்றேன். கட்டணம் அதிகமாக இருந்தது. ஆனால் என் பல்லவியின் உயிரையேனும் அவர்கள் காப்பாற்றினார்கள்,” என்கிறார். 3000 ரூபாய் கட்டணம் பெற்றிருக்கிறார் மருத்துவர். அடுத்த நாளே பல்லவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். “அதிக ரத்தம் வெளியேறியதில் அவள் இறந்து கூட போயிருப்பாள் என அவர் சொன்னார்” என கிரிஷ் நினைவுகூர்கிறார்.













