சுக்ரானி சிங்கிற்கு காட்டில் இலுப்பம்பூ சேகரிக்காத நாள் பற்றி நினைவே இல்லை. “நான் சிறுமியாக இருந்தபோது என் அம்மாவுடன் காட்டிற்குச் செல்வேன். இப்போது என் குழந்தையை அழைத்து வருகிறேன்,” என்கிறார் 45 வயது சுக்ராணி. அவர் மரங்களில் இருந்து புதிதாக பூத்த இலுப்பம்பூக்களைப் பறிப்பதற்கு அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிவிடுகிறார். வெப்பம் காரணமாக மரத்திலிருந்து விழும் பூக்களை சேகரிப்பதற்காக மதியம் வரை அவர் காத்திருக்கிறார். வீடு திரும்பியதும் வெயிலில் பூக்களை பரப்பி உலர வைக்கிறார்.
மத்திய பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தாவ்கர் புலிகள் சரணாலயம் அருகே வசிக்கும் சுக்ரானி போன்ற சிறிய விவசாயிகளுக்கு இலுப்பம்பூ என்பது உறுதியான வருவாய் ஆதாரம். மண்பூர் வட்டத்தில் உள்ள பரசி கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உமரியா சந்தையில் ஒரு கிலோ உலர் பூக்களை ரூ.40க்கு சுக்ராணி விற்கிறார். ஏப்ரலில் 2-3 வாரங்கள் கிடைக்கும் இப்பூக்களை 200 கிலோ வரை அவர் சேகரித்து விடுகிறார். “இந்த மரங்கள் எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கவை,” என்கிறார் சுக்ராணி. பூக்களுடன் பழங்கள், மரங்களின் பட்டையும் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்து குணங்கள் நிறைந்தவையாக கருதப்படுகிறது.
சீசன் காலத்தில் காட்டிலிருந்து மதியம் 1 மணிக்கு வீடு திரும்பும் சுக்ராணி உணவு சமைத்து தனது கணவர், 5 குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்திற்கு உணவளிக்கிறார். அவரது கணவரின் கோதுமை அறுவடை, சேகரிப்பு பணியில் மதியம் 3 மணியளவில் இணைந்து கொண்கிறார். சுக்ராணியும் அவரது கணவரும் கோண்ட் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கென சொந்தமாக சுமார் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில் மழை நீரை நம்பி கோதுமை பயிரிட்டு சொந்த பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்கின்றனர்.











