“நாங்கள்தான் பஷ்மினா சால்வைகளுக்கு மென்மைத்தன்மையை வழங்குகிறோம்.”
ஸ்ரீநகரிலுள்ள அப்துல் மஜீத் லோனின் வீட்டில் நூல்கள் கிடக்கின்றன. கையில் ஒவுச்சுடன் (கூரான இரும்பு கருவி) தரையில் அமர்ந்துகொண்டு, தேவையற்று இருக்கும் நூல்களை நிபுணத்துவத்துடன் பறித்து, புதிதாக நெய்யப்பட்டிருக்கும் பஷ்மினா சால்வையின் பஞ்சை அகற்றுகிறார். “மிகச் சிலருக்கு மட்டும்தான் எங்களின் கலை இருப்பதே தெரியும்,” என்கிறார் அவர்.
42 வயதாகும் கைவினைக் கலைஞரான அவர் ஸ்ரீநகர் மாவட்டத்தின் நவக்கடல் வார்டில் வசிக்கிறார். மதிப்புவாய்ந்த பஷ்மினா சால்வைகளிலிருந்து நூலையும் பஞ்சையும் பறிக்க ஒவுச் பயன்படுத்துகிறார். இந்த வேலை புரஸ்காரி என அழைக்கப்படுகிறது. இதை செய்பவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஸ்ரீநகரில் மட்டும் இருக்கின்றனர். அப்துல், இருபது வருடங்களாக புரஸ்காராக இருக்கிறார். எட்டுமணி நேர வேலைக்கு கிட்டத்தட்ட 200 ரூபாய் சம்பாதிக்கிறார்.
நெய்யப்பட்ட, நிறமளிக்கப்பட்ட, பூத்தையல் கொண்ட எல்லா வகை பஷ்மினா சால்வைகளுக்கும் புரஸ்காரி கைகளால் செய்யப்படுகிறது. துணியின் நுட்பமான இயல்புக்கு எந்த இயந்திரமும், கைவினைஞரின் திறனளவுக்கு பொருந்தாது.
புரஸ்காரிக்கு ஒவுச் மிகவும் முக்கியம். “எங்களின் மொத்த வருமானமும் ஒவுச் மற்றும் அதன் தரம் ஆகியவற்றை சார்ந்துதான் இருக்கிறது,” என்கிறார் அப்துல், எதிரே தறியில் விரித்து மாட்டப்பட்டிருக்கும் சால்வையை உற்று நோக்கியபடி. “ஒவுச் இல்லாமல் பஷ்மினா சால்வையை சுத்தப்படுத்துவது எங்களுக்கு கஷ்டம்.”














