“நீர்க்குடம் உடைந்த அந்த மாலையில், கடுமையான வலியில் நான் இருந்தேன். அதற்கு முந்தைய மூன்று நாட்களும் பனி பொழிந்து கொண்டிருந்தது. அப்படி நேர்ந்து சூரியவெளிச்சம் பல நாட்களாக இல்லாமல் இருக்கும்போது எங்களின் சூரியத் தகடுகளில் மின்சாரம் வருவதில்லை.” 22 வயது ஷமீனா பேகம், ஜம்மு காஷ்மீரின் வசிரிதல் கிராமத்தில் இரண்டாம் குழந்தை பெற்ற நேரம் குறித்து பேசுகிறார். அந்த கிராமத்தில் சூரியன் அதிக நேரம் காயாது. தொடர்ச்சியாகவும் இருக்காது. ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கான ஒரே மின்சார ஆதாரம் சூரிய ஆற்றல்தான்.
“எங்களின் வீட்டில் லாந்தர் விளக்கு மட்டும்தான்,” என்கிறார் ஷமீனா. “அண்டை வீட்டார் அந்த மாலை ஒன்றாகி அவரவர் லாந்தர் விளக்கை எடுத்து வந்தனர். ஐந்து பிரகாசமான மஞ்சள் ஜுவாலைகள், ரஷிதாவை நான் பெறுவதற்கு என் தாய் உதவிக் கொண்டிருந்த அறைக்கு ஒளி கொடுத்தன.” ஏப்ரல் 2022-ன் ஓரிரவு அது.
படுகாம் கிராமப் பஞ்சாயத்தின் கீழ் உள்ள கிராமங்களில் வசிரிதல் அழகான கிராமம் ஆகும். ஸ்ரீநகரிலிருந்து 10 மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கும் பகுதி. அதில் நான்கரை மணி நேரம் ரஸ்தான் சாலையிலிருந்து விலகி குரெஸ் பள்ளத்தாக்கின் வழியாக அரை டஜன் செக்போஸ்டுகளைத் தாண்டி, இறுதியாக 10 நிமிட தூரம் நடந்து ஷமீனாவின் வீட்டை அடைய வேண்டும். அது ஒன்றுதான் வழி.
இக்கிராமத்தில் வசிக்கும் 24 குடும்பங்களின் வீடுகள் இருக்கும் குரெஸ் பள்ளத்தாக்கும் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து சில மைல் தூரத்தில்தான் இருக்கிறது. வீடுகள் தேவதாரு மரத்தால் கட்டப்பட்டு, வெப்பம் தடுக்க உள்ளே களிமண்ணால் பூசப்பட்டிருக்கின்றன. பழைய கவரிமாக்களின் அசலான கொம்புகள் அல்லது அவற்றைப் போல் மரத்தில் செய்த பச்சை பூச்சு கொண்ட கொம்புகள் வீட்டுக் கதவுகளை அலங்கரிக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் ஜன்னல்களும் எல்லையின் மறுபக்கத்தை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு வயது ஃபர்ஹாஸ் மற்றும் நான்கு மாதக் குழந்தை ரஷிதா (பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) ஆகியோருடன் வீட்டுக்கு வெளியே ஷமீனா விறகுக் குவியலின் மீது அமர்ந்து மாலை நேரச் சூரியனின் இறுதிக் கதிர்களை ரசித்துக் கொண்டிருக்கிறார். “என்னை போன்ற புதிய தாய்கள் காலை, மாலை வெயிலில் கைக்குழந்தைகளுடன் அமர்ந்திருக்க வேண்டும் என என் தாய் சொல்வார்,” என்கிறார் அவர். அது ஆகஸ்டு மாதம்தான். பனி இன்னும் பள்ளத்தாககை முழுவதுமாக மூடியிருக்கவில்லை. இன்னும் மேகம் நிறைந்த நாட்களும் அவ்வப்போது பொழியும் மழையும் இருந்தது. சூரிய வெளிச்சமற்ற நாட்களும் மின்சாரமின்றி இருக்கிறது.









