வெயில் நிறைந்த மதிய வேளையில் அக்ரானி தாலுக்கா தாத்கான் பகுதியைச் சேர்ந்த ஷிவந்தா தாத்வி புடவையினால் தலைக்கு முக்காடு போட்டபடி, தனது சிறிய ஆட்டுக் கூட்டத்தை மேய்க்கிறார். ஆட்டுக்குட்டி ஒன்று மந்தையிலிருந்து பிரிந்து புதர்கள் அல்லது மற்றவர்களின் வயலுக்குள் செல்ல முயலும்போது, கையில் வைத்திருக்கும் தடியை தரையில் தட்டி அதை மீண்டும் கூட்டத்தில் சேர்க்கிறார். “அவற்றின் மீது எப்போதும் கண் வைத்திருக்க வேண்டும். குட்டிகள் மிகவும் துடுக்கானவை. எங்காவது ஓடிவிடும்,” என அவர் சிரிக்கிறார். “இப்போது அவை என் குழந்தைகளைப் போல ஆகிவிட்டன.”
நந்துர்பார் மாவட்டர் ஹரங்குரி கிராமத்தின் மகராஜபாதாவில் உள்ள தனது கூட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டை நோக்கி அவர் நடக்கிறார். உரசும் மரங்கள், பறவைகளின் கீச்சுக்கு இடையே அவர் ஆடுகளுடன் இங்கு சுதந்திரமாக இருக்கிறார். 12ஆண்டு கால திருமண வாழ்வில் மலடி, பாவி, சூனியக்காரி போன்ற வசவுகளின்றி இருக்கிறார்.
“குழந்தைப் பேறு இல்லாத ஆண்களை இதுபோன்ற வசவுகள் தாக்குவதில்லையே ஏன்?” என கேட்கிறார் ஷிவந்தா.
14 வயதில் திருமணமான ஷிவந்தாவிற்கு இப்போது 25 வயது. அவரது கணவரான 32 வயதாகும் ரவி வேலை கிடைக்கும் போது நாள் ஒன்றுக்கு ரூ.150 வரை ஈட்டுகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். இருவரும் மகாராஷ்டிராவின் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நேற்றிரவு ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னை மீண்டும் அடித்தார், “எதுவும் புதிதல்ல,” என்கிறார் ஷிவந்தா. “என்னால் அவருக்கு குழந்தை கொடுக்க முடியவில்லை. என் கருப்பை பிரச்னையாகிவிட்டதால் என்னால் மீண்டும் கருத்தரிக்க முடியாது.”
2010ஆம் ஆண்டு ஷிவந்தாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டபோது, தாத்கான் கிராம மருத்துவமனையில் அவரது கருப்பையில் கட்டிகள் (PCOS) இருப்பதும், அதனால் கருப்பை சேதமடைந்துள்ளதும் கண்டறியப்பட்டது. மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு அப்போது 15 வயது.







