தேங்கி நிற்கும் சாக்கடையை கடந்து விறகுக் கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட இரண்டு குடிசை வீடுகளுக்கு இடையேயான புழுதி நிறைந்த பாதைக்குள் நுழைகிறார் நல்லம்மா. நீல நிற சிஃபான் புடவையணிந்த அந்த 35 வயது பெண்மணி தொடர் புழக்கத்தில் இருக்கும் அப்பாதையில் வெறும் காலில் நடந்து செல்கிறார்.
புதர்கள், காய்ந்த புற்கள், குப்பைகள் நிறைந்த திறந்தவெளியை நாங்கள் அடைந்தோம். “திறந்தவெளி எங்கும் நாங்கள் அமர்கிறோம் [மலம் கழிப்பதற்கு],” எனும் நல்லம்மா நாங்கள் கடந்து வந்த குடிக்கால் கிராம வீடுகளை சுட்டிக்காட்டுகிறார். “யாருடைய வீட்டிலும் கழிப்பறைகள் கிடையாது. அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் [சிசேரியன் சிகிச்சை], கர்ப்பிணியாக இருந்தாலும், மாதவிடாய் நாட்களிலும் இங்கு தான் நாங்கள் வரவேண்டும்,” என்கிறார் தீர்க்கமாக.
காலப்போக்கில், இன்டி வேனுகா [வீட்டின் பின்புறம்] என்பதே திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு என்றாகிவிட்டது. “எங்கள் பகுதி பெண்கள் எல்லோரும் இங்கு தான் வருகின்றனர். சந்துக்கு அந்த பக்கம் ஆண்களுக்கென ஒதுக்கப்பட்ட திறந்தவெளி ஒன்று உள்ளது,” என விளக்குகிறார் நல்லம்மா.
கர்னூல் மாவட்டம் எம்மிகானூர் வட்டாரத்தில் உள்ள குடிக்கால் கிராமத்தில் 11,213 பேர் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு) வசிக்கின்றனர். “திறந்தவெளி மலம் கழிக்காத கிராமம்” என்று மத்திய அரசாலும், பிறகு 2019ஆம் ஆண்டு மாநில அரசாலும் இக்கிராமம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நல்லம்மா வசிக்கும் குடிக்காலின் மூன்றாவது வார்டில் கண்டிப்பாக கழிப்பறைகள் கிடையாது என்கின்றனர் அக்குடியிருப்புவாசிகள். மொத்தமுள்ள 8 வார்டுகளில் ஆறு வார்டுகளில் கழிப்பறைகள் கிடையாது என்கிறார் நல்லம்மா. (20 வார்டுகள் என அலுவல் தரவுகள் தெரிவிக்கின்றன, ஆனால் உள்ளூர் செயலர் மற்றும் அவரது உதவியாளர் போன்ற உள்ளூர் அரசு அதிகாரிகள் எட்டு வார்டுகள் என்கின்றனர்.)
குடிக்காலில் தோராயமாக 25 சதவிகித குடியிருப்புவாசிகள் தினக்கூலி வேலை செய்பவர்கள். கிராம மக்களில் பாதி பேர் விவசாயிகள். பெரும்பாலான விவசாயிகள் மிளகாய், பருத்தி போன்ற வணிகப் பயிர்களை பயிரிடுகின்றனர். இப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மழையை நம்பி 1,420 ஹெக்டேர் பாசன நிலங்கள் உள்ளன.
வன்னி மரத்தடி நிழலில் படுத்திருக்கும் நான்கு காட்டுப் பன்றிகளை நல்லம்மா சுட்டிக்காட்டுகிறார். காட்டுப்பன்றிகளுடன், “வெள்ளை நாரைகளையும் பாம்புகளையும்” இங்கு சாதாரணமாக காணலாம். “காலையில் இங்கு நாங்கள் வரும்போது கும்மிருட்டாக இருக்கும். இப்போது வரை அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை, பயம் மட்டும் உள்ளது,” என்கிறார் அவர்.








