“சார், சில வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர். அவர்களை பார்த்துவிட்டு வரலாமா? எனது இயர்போனை வைத்திருக்கிறேன், ங்கள் பாடங்களை கவனிப்பேன்,” என்று தயக்கத்துடன் ஆசிரியரிடம் அனுமதி கேட்கிறார் முசாஃபர். தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் அவர், வந்திருக்கும் சில வாடிக்கையாளர்களை கவனிக்கிறார். “தாஜி... சாப்ஜி லே-லோ...” என்று மீண்டும் ஒருமுறை கூவியபடி ஸ்மார்ட் ஃபோனில் அறிவியல் வகுப்பிற்கு திரும்புகிறார்.
முசாஃபர் ஷேக்கிற்கு ஜூன் 15ஆம் தேதிதான் ஆன்லைன் வகுப்புகளின் முதல் நாள். “எனக்கு எல்லா நேரமும் போக்குவரத்து நெரிசல், வாடிக்கையாளர்களின் உரையாடல் என பின்னணியில் இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும். வகுப்பில் கவனம் செலுத்துவதா, காய்கறிகளை விற்பதா என்று முடிவு செய்ய முடியாது,” என்கிறார் 8ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதாகும் முசாஃபர். வடக்கு மும்பை மலாடின் மால்வானி பகுதியில் பரபரப்பு நிறைந்த காலை 10 மணி வேலையில் தனது கைவண்டியில் கத்திரிக்காய், பீட்ரூட், வெள்ளரி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை விற்றபடி இணைய வழி வகுப்பில் பங்கெடுக்கிறார்.
வகுப்பில் பங்கெடுப்பதற்காக நண்பனிடமிருந்து சில மணி நேரத்திற்கு தொலைபேசியை முசாஃபர் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு என சொந்தமாக ஸ்மார்ட்ஃபோன் கிடையாது. “இந்நேரத்திற்கு என அண்ணன் முபாரக்கும் [9ஆம் வகுப்பு படிக்கிறார்] தனது நண்பனின் வீட்டில் இணைய வழி வகுப்பில் பங்கெடுத்து கொண்டிருப்பான். அப்பாவும் வேலையில் இருப்பார். என்னால் தள்ளுவண்டியை நிறுத்தி வைக்க முடியாது. மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் 10ஆம் தேதி தான் நாங்கள் மீண்டும் [பணியை] தொடங்கினோம்,” என்கிறார் அவர்.
சிறுவனின் தந்தை இஸ்மாயில் ஜனவரி மாதம் தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்தார். குடும்பச் செலவு அதிகரித்ததால், கூடுதல் வருமானம் தேவைப்பட்டது. 40 வயதாகும் இஸ்லாம் லாரி ஓட்டுநரின் உதவியாளராக இருந்து வந்தார். போதிய வருமானமின்றி அந்த வேலையை விட்டு விட்டார் (இருப்பினும் ஜூன் மாதம் அந்த வேலைக்கே மீண்டும் திரும்பினார்). ஹேர்கிளிப்புகளை செய்வது, கவுன்களை தைப்பது போன்றவை சிறுவனின் தாயான 35 வயது மோமினாவின் வேலை. 2 வயதாகும் ஹஸ்னைன், 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது ஃபர்சானா, 6ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது அஃசானா என ஏழு பேர் கொண்ட குடும்பம்.
தள்ளுவண்டியை வாடகைக்கு எடுத்த இரண்டு மாதங்களில் மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 பொதுமுடக்கம் தொடங்கியதால் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்துவந்த காய்கறி வியாபாரமும் முடங்கியது. “அப்பா தான் முதலில் தள்ளுவண்டி ஓட்டினார்,” என்று கூறும் முசாஃபர், தனது 17 வயது அண்ணன் முபாரக்குடன் காலை 7 மணி முதல் மதியம் வரையிலான பள்ளிக்குச் சென்றான். இரண்டு சிறுவர்களுமே பள்ளி நேரம் முடிந்ததும் காய்கறிகளை விற்பதற்கு தந்தைக்கு உதவினர்.











