“இங்கு நடக்கும் போராட்டத்தால் நிறுவன மக்கள் கண்டிப்பாக எரிச்சலடைந்திருப்பார்கள். போக்குவரத்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வணிகமும் குறைவாகவே நடைபெறுகிறது,” என்கிறார் குண்ட்லி தொழிற்துறை பகுதியில் உள்ள வீட்டு உபயோக தயாரிப்பு ஆலையின் பாதுகாப்பு கண்காணிப்பாளரான 22 வயது நிசாமுதீன் அலி. ஹரியானா- டெல்லி எல்லையான சிங்குவில் விவசாயிகளின் போராட்டக் களத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அவர் வசிக்கிறார். (குண்ட்லி எனும் பழங்கால கிராமம், இப்போது ஹரியானாவின் சோனிபட் மாவட்ட நகராட்சி கவுன்சிலாக உள்ளது).
இடையூறுகளால் இரண்டு மாதங்களாக நிசாமுதீனுக்கு அவரது நிறுவனம் ஊதியம் வழங்காத போதிலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவைத் தொடர்கிறார். “ஆலை இப்போது சந்திக்கும் பிரச்னையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதனால் எனது சம்பளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நான் விவசாயிகளை ஆதரிக்கிறேன்,” என்கிறார் அவர். அவருடைய ஆதரவும் சமநிலையில் இல்லை - “என் ஆலையை 20 சதவீதம் ஆதரித்தால், விவசாயிகளின் போராட்டத்தை 80 சதவீதம் ஆதரிப்பேன்.”
பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன் குண்ட்லிக்கு வந்த நிசாமுதீனுக்கு அங்கு 6.5 பிகாஸ் நிலம் (பீகாரில் சுமார் 4 ஏக்கர் நிலம்) உள்ளது. அவரது குடும்பம் கோதுமை, அரிசி, துவரை, கடுகு, பாசிப்பயறு, புகையிலை ஆகியவற்றை பயிரிட்டு வருகிறது. “விவசாயிகள்தான் வாழ்வாதாரத்திற்காக பயிர்களை வளர்க்கின்றனர், அரசோ, அம்பானியோ, அதானியோ அல்ல. இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வலியை நான் அறிவேன். இந்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், நமக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதுகூட நின்றுவிடும். பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவும் தொடராது,” என்கிறார் அவர்.
“பீகாரில் கோதுமைக்கு கிலோ ரூ.25 வழங்கப்படும் என்று [சில ஆண்டுகளுக்கு முன்] சொல்லப்பட்டது. பீகாரில் [பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ்] ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் அவர்களின் கணக்கில் ரூ.2000 அளிக்கப்பட்டது. பிறகு கிலோ 25 ரூபாய் என்பது 7 ரூபாய் என குறைந்தது. நாங்கள் முன்னேற நினைக்கிறோம். அரசு எங்களை பின்னோக்கி தள்ளுகிறது.”










