மே 4ம் தேதி இறுதியாக இருந்த இரண்டு சடலங்களை தகனத்துக்கு தயார் செய்யுமாறு பப்புவிடம் ஹரிந்தர் சிங் சொன்னபோது மற்றவர்கள் குழம்புவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன.
”அங்கே இரண்டு சிறுவர்கள் கிடக்கின்றனர்,” எனக் கூறினார் ஹரிந்தர். முதலில் ஆச்சரியம் அளித்த அவரின் வார்த்தைகள் ஊக்கமிகுதியில் சொல்லப்பட்டதை சக ஊழியர்கள் புரிந்து கொண்டதும் ஆச்சரியம் சிரிப்பானது. புது தில்லியில் தொடர்ந்து வேலை இருக்கும் நிகாம் போத்தின் சுடுகாட்டின் கடுமையான வேலைகளுக்கு இடையில் அத்தகைய ஆறுதல் கொடுக்கும் தருணம் மிகவும் அரிது.
ஆனாலும் என்னிடம் விளக்க வேண்டும் என விரும்பினார் ஹரிந்தர். தகனம் நடக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் சிறு அறையில் சக ஊழியர்களுடன் உணவு உண்டு கொண்டிருந்தார். ஆழமாய் மூச்சுவிட்டார். கோவிட் தொற்று இருக்கும் சூழலில் மூச்சுவிடும் வாய்ப்பு பெற்ற அவர் அதிர்ஷ்டசாலிதான். ”அவற்றை நீங்கள் சடலங்கள் என அழைப்பீர்கள். நாங்கள் சிறுவர்கள் என அழைப்போம்,” என்றார்.
“இங்கு கொண்டு வரப்படும் ஒவ்வொருவரும் யாருடைய மகனோ மகளோதான்,” என்கிறார் பப்பு. தகன உலைக்கு அவர்களை அனுப்புவது மிகவும் வலி கொடுக்கும் விஷயம். அவர்களின் ஆன்மாவுக்காக நாங்கள் அதை செய்ய வேண்டுமல்லவா?”. 200 சடலங்கள் கடந்த ஒரு மாதத்தில் நிகாம் போத்தின் உலையிலும் சிதைகளிலும் எரிக்கப்பட்டிருக்கின்றன.
மே 4ம் தேதி 35 சடலங்கள் தகன உலையில் எரிக்கப்பட்டன. கோவிட் இரண்டாம் அலை தில்லியை தாக்கிய ஏப்ரல் முதல் வாரத்தின் தினசரி சராசரி 45-50லிருந்து கொஞ்சம் குறைவான எண்ணிக்கைதான். தொற்றுக்கு முன்பு ஒரு மாதத்துக்கே 100 சடலங்கள்தான் எரிக்கப்பட்டன.
தில்லியின் யமுனா நதிக்கரையின் கஷ்மெரே வாசலுக்கு அருகே பெரிய சுவர் எழுத்துகள் இருக்கின்றன. “என்னை இங்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இங்கிருந்து நான் தனியே செல்வேன்”, என்ற எழுத்துகள். ஆனால் இந்த வருடத்தின் ஏப்ரல்-மே மாதங்களில் கோவிட் தொற்று வந்த பிறகு, இறந்தவர்கள் தனியே செல்லவில்லை. இறப்புக்கு பின்னான பயணத்தில் அவர்களின் நண்பர் ஒருவரேனும் இருந்திருப்பார்.














