உஜ்வால் தாஸ், படல்பூரில் கடைசி விவசாயி. அங்கு இருக்கும் ஒரே விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
கடந்த அக்டோபர் மாதம் அவரது வீட்டை யானைகள் சிதைத்துப் போட்டன. கடந்த பத்து வருடங்களில் யானைகளால் அவரது மண் வீடு அழிக்கப்பட்டது அது எட்டாவது முறை.
அது அறுவடை காலம். மழைக்காலம் வந்த நேரம். கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரம் மலைகள் மற்றும் காடுகளினூடாக பயணித்து படல்பூரின் கிராமத்துக்கு யானைகள் வந்து சேர்ந்தன. முதலில் அவை, மயூரக்ஷி நதியின் கிளை நதியான சித்தேஷ்வரி கரையில் சற்று நேரம் இளைப்பாறின. கிராமத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு அது. பிறகு 200 கிலோமீட்டர் தொலைவு பயணித்த களைப்பில் அவை, பயிர்கள் இருந்த நிலங்களை நோக்கி சென்றன.
"எங்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் நாங்கள் தீப்பந்தங்களுடன் அவற்றை விரட்ட சென்றோம்," என்கிறார் சந்தனா மற்றும் உஜ்வால் தாஸின் இளைய மகனான பிரசன்ஜித். "பல முறை யானைகள் வந்து எங்களின் நெல் வயல்களை அழித்திருக்கின்றன. யானைகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டால் நாங்கள் எதை சாப்பிடுவது?"
நெல் போனது மட்டுமல்ல தாஸின் கவலை. உருளைக்கிழங்கு, பாகற்காய், தக்காளி, பூசணி, வாழை, பப்பாளி போன்றவையும் குடும்பத்தின் 14 பிகா (கிட்டத்தட்ட 8.6 ஏக்கர்) நிலத்தில் விளைவிக்கப்படுகிறது.
உஜ்வல் தாஸும் சராசரி விவசாயி இல்லை. அவரின் பூசணிகள், வருடந்தோறும் ஒவ்வொரு ஒன்றியத்தில் நன்றாக விவசாயம் பார்ப்பவர்களுக்கு தரப்படும் மாநில விருதான க்ரிஷக் ரத்னா விருதை பெற்று தந்தது. ராஜநகர் ஒன்றியத்துக்காக அவர் அந்த விருதை 2016 மற்றும் 2022 வருடங்களில் பெற்றார். 10000 ரொக்கமும் சான்றிதழும் பெற்றார் அவர்.








