“என் தாயும் நானும் இது குறித்து நேற்று இரவு சண்டை போட்டோம்,” என்கிறார் 21 வயது ஆஷா பஸ்ஸி. “கடந்த மூன்றரை வருடங்களாக, கல்வியை நிறுத்திவிட்டு மணம் முடித்துக் கொள்ளும்படி என் பெற்றோர் என்னை சொல்லி வருகின்றனர்,” என்கிறார்.
யவத்மால் நகரத்திலுள்ள சாவித்ரி ஜோதிராவ் சமாஜ்கர்யா மகாவித்யாலயாவில் இறுதி ஆண்டு படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஆஷா, சமூகப்பணியில் இளங்கலை பயின்று வருகிறார். குடும்பத்திலேயே முதன்முறையாக முறையான கல்வி பெறுபவர்களில் அவரும் ஒருவர். “இளம்வயதில் மணம் முடிக்கும் சிறுமிகள் பாராட்டப்படுகின்றனர்,” என்கிறார் அவர். “ஆனால் நான் கல்வி பெற விரும்புகிறேன். அது ஒன்று மட்டும்தான் என் விடுதலைக்கு வழி,” என்கிறார்.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்திலுள்ள ஜெவாலி கிராமத்தை சேர்ந்த ஆஷா சீர்மரபினராக வரையறுக்கப்பட்டிருக்கும் மதுரா லபன் சமூகத்தை சேர்ந்தவர். விவசாயிகளான அவரின் பெற்றோர் சோயா, பருத்தி, கோதுமை, தானியங்கள் போண்றவற்றை அவர்கள் கொண்டிருக்கும் நிலத்தில் விளைவிக்கின்றனர்.
மூன்று மகள்களையும் ஒரு மகனையும் வளர்க்க குடும்பம் விவசாயத்தை சார்ந்திருக்கிறது. ஆஷாதான் மூத்த மகள். யவத்மால் நகரில் தாய்மாமன் மற்றும் அத்தை ஆகியோருடன் வசித்து வருகிறார்.
வீட்டருகே இருக்கும் ஜில்லா பரிஷத் பள்ளியில் சில ஆசிரியர்கள் வற்புத்தியதன் பேரில் ஆஷாவின் பெற்றோர் ஏழு வயதாக இருக்கும்போது அவரை சேர்த்துவிட்டனர். அங்கு 3ம் வகுப்பு வரை படித்த அவர், பிறகு 112 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யவத்மால் நகருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவர் மகாராஷ்டிரா மாநில பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் படித்து இறுதியில் அருகே இருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்தார்.








