“மேய்ச்சலை செய்வது எங்களின் தலைமுறைக்கு கடினமான விஷயம்,” என்கிறார் போர்த்தெய்ன் கிராமத்துக்கு சற்று தூரத்தில் அமைந்திருக்கும் பெஹ்லியை சேர்ந்த இளம் பகர்வாலான தலிப் கசானா. தொலைதூரக் கல்வியில் அவர் அரசியல் அறிவியல் படிப்பில் முதுகலை படித்து வருகிறார்.
மேய்ச்சல் சமூகமான பகர்வால்கள் பெருங்குழுக்களாக இமயத்தில் தங்களின் கால்நடைகளுக்காக மேய்ச்சல் நிலங்களை தேடி செல்வார்கள். தலிப் சொல்கையில், “கிராமத்தில் தங்கி ஆடுகள் மேய்ப்பதற்கு பதிலாக, நாங்கள் படிக்கத் தொடங்கிவிட்டால், பிற விஷயங்களும் எங்களுக்கு பழக்கமாகும்… எங்களுக்கு மூடப்பட்ட கழிவறை வேண்டும். ஒரு இடத்தில் தங்கிப் படிக்க வேண்டும்,” என்கிறார்.
தலிப், ஜம்முவின் கத்துவா மாவட்டத்திலுள்ள சிறு பகர்வால் வசிப்பிடத்தில் வாழ்கிறார். அரை நிரந்தர வசிப்பிடமான அதில் வாழ்பவர்களுக்கு நிலத்தின் மீது உரிமை கிடையாது.
இந்த அரை மேய்ச்சல் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பல இளைஞர்கள் கடந்த பத்து வருடங்களாக தங்களின் பாரம்பரிய வாழ்க்கைகளிலிருந்து விலகி உயர்கல்விக்கு சென்று கொண்டிருக்கின்றனர். பணம் இருந்தால் அவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் அரசியல் அல்லது சிவில் வேலைகளில் சேர விரும்புகின்றனர்.
பகர்வால் குடும்பத்தில் இரண்டு மகன்கள் இருந்தால், ஒருவர் செம்மறியை பார்த்துக் கொள்வார். அடுத்தவர் வெளியே வேலை தேடுவார். தலிப் கசனா, கல்வியை தொடரும் திட்டத்தில் இருக்கிறார். ஆனால் அவரின் தம்பிக்கு ஆடு வளர்ப்பதில் விருப்பமில்லை. அவரும் வெளியே வேலைக்கு முயல விரும்புகிறார். ஆனால் அவரின் அண்ணன், “நம்மை போன்ற மக்களுக்கு வேலைகள் இல்லை,” என எச்சரிக்கிறார்.














