அவர் ஒரு வேட்டைக்காரர், விவசாயி, கூடை முடைபவர், உள்ளூர் கவுன்சிலின் தலைவராக இருந்துள்ளார். மாகோ லிங்கி தற்பெருமை பேசவில்லை. அருணாச்சல பிரதேசத்தின் இடு மிஷ்மி பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த முதியவர் தனது வாழ்க்கையை அப்படித்தான் வாழ்ந்துள்ளார்.
அவரது தலைமுறையின் பெரும்பாலான உறுப்பினர்களைப் போலவே, அவரும் இந்தியாவின் கிழக்குக் கோடியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் தொலைதூர பகுதிகளில் உயிர்வாழ பல திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
"நாங்கள் கிராமத்தில் எதையும் வாங்கவில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. எல்லாவற்றையும் நாங்களே உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் விவசாயம் செய்தோம், வேட்டையாடினோம், பொருட்களை உருவாக்கினோம்", என்று இப்போது 60 வயதை கடந்துள்ள லிங்கி கூறுகிறார். பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது கைகள் ஒரு புதிய கூடையை முடைவதில் மும்முரமாக இருந்தன.
இடு மிஷ்மி சமூகம் அருணாச்சல பிரதேசம் முழுவதும் பரவியுள்ளது. சில குக்கிராமங்களில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அனினி வட்டத்திற்கு அருகிலுள்ள திபாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அஹுன்லியைச் சேர்ந்தவர் லிங்கி.











