கசப்புணர்வோ கவலையோ இல்லையா? 60 வருடங்களுக்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடைந்த போது அவர்கள் இருவரும் இரு வேறு பாதைகளில் சென்றனர். அது இணக்கமான பிரிவாக இருக்கவில்லை.
”ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் பல பிரச்சினைகளிலும் போராட்டங்களிலும் ஒன்றிணைந்து பணியாற்றியிருக்கிறோம்,” என்கிறார் நல்லகண்ணு. ”ஒருவர் மீது ஒருவர் முன்பு கொண்டிருந்த அதே தோழமை உணர்வுடன்.”
”நாங்கள் இருவரும் சந்திக்கும்போது ஒரே கட்சியாக மாறி விடுவோம்,” என்கிறார் சங்கரய்யா.
தற்காலச் சூழலில் அதிகரித்து வரும் மத மோதல்கள் மற்றும் வெறுப்புணர்வு ஆகியவற்றை பற்றிய அவர்களின் கருத்து என்ன? அவர்கள் சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசம் உயிருடன் நீடிக்கும் என நம்புகிறார்களா?
”அவநம்பிக்கை அதிகமாக இருந்த காலக்கட்டம் சுதந்திரப் போராட்டத்திலும் இருந்திருக்கிறது,’ என்கிறார் நல்லகண்ணு. ’உங்களால் ஜெயிக்க முடியாது என சொல்லியிருக்கிறார்கள். இந்த உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றார்கள். எங்களின் சில குடும்பங்கள் கூட போராட்டங்களிலிருந்து நாங்கள் விலகியிருக்க வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால் நாங்கள் அந்த எச்சரிக்கைகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றைத் தாண்டி எழுந்து நின்றோம். அதனால்தான் நாங்கள் இன்றும் இங்கிருக்கிறோம்.”
அதே நேரத்தில் பரந்துபட்ட அளவில் ஒற்றுமை கட்டி எழுப்பப்படுவதற்கான தேவையும் இருப்பதாக இருவரும் சொல்கின்றனர். கடந்த காலத்தை சேர்ந்தவர்களிடமிருந்து பல விஷயங்கள் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ”இஎம்எஸ் (நம்பூதரிபாட்) இருந்த அறைக்குள் காந்தியின் புகைப்படம் கூட இருந்ததென நான் நினைக்கிறேன்,” என்கிறார் ஆர்என்கே.
நம்மிடையே இருக்கும் லட்சக்கணக்கான பேரையும் அச்சுறுத்துகிற அரசியல் சூழல் நிலவும் போது எப்படி இந்த இரண்டு பேரும் அமைதியாகவும் நம்பிக்கையோடும் இருக்கின்றனர்? தோளை குலுக்கியபடி நல்லகண்ணு சொல்கிறார்: ”இதைவிட கொடுங்காலத்தை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என.
பின்குறிப்பு:
2022ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று - The Last Heroes: Foot soldiers of Indian Freedom had already gone to press புத்தகம் பதிப்புக்கு சென்றுவிட்ட சமயத்தில், தமிழ்நாடு அரசாங்கம் தகைசார் தமிழர் விருதை ஆர்என்கேவுக்கு வழங்கியது. தமிழ்ச்சமூகத்துக்கும் மாநிலத்துக்கும் அளப்பரிய பங்களித்த ஆளுமைகளுக்கு தமிழ்நாட்டின் உயரிய விருதான இந்த விருது 2021ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. 10 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் கொண்டிருக்கும் இந்த விருதை ஆர்என்கேவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழில்: ராஜசங்கீதன்