மாலை மங்கிவரும் அந்திப் பொழுதில், கொள்ளிடம் நதிக்கரையில் அமர்ந்து கொண்டு, உழவர் வடிவேலன் எனக்குத் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரது எள் வயல், அங்கிருந்து 10 நிமிடத் தொலைவில் உள்ளது. அவர் பிறந்த 12 நாட்கள் கழித்து, இந்நதியில் பெருவெள்ளம் வந்தது. அவரது கிராமத்தில் அப்போது எள் பயிரிட்டது. அதிலிருந்து நறுமணம் வீசும். தேன் நிற நல்லெண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. மிதக்கும் வாழைமட்டைகளைப் பிடித்துக் கொண்டு நீச்சல் பழகியது. காவேரி ஆற்றங்கரையில் வசித்த ப்ரியாவுடன் காதலில் விழுந்தது, தன் தந்தையின் ஆட்சேபணைகளை மீறி அவரையே திருமணம் செய்து கொண்டது, தனது 1.5 ஏக்கர் நிலத்தில் நெல், கரும்பு, உளுந்து, எள்ளு எனப் பயிரிட்டது எனப் பல கதைகள்..
இதில் முதல் மூன்று பயிர்களில் கொஞ்சம் லாபம் கிடைக்கிறது. ”நெல்லுக் காசுல கரும்பு நடுவோம்... கிடைக்கிற காச நிலத்திலேயே போட்டுடறது,” என விளக்குகிறார். எள்ளு மட்டும் வீட்டுக்குத் தேவைப்படும் எண்ணெய்க்கு. எள் விதைகள் மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்பட்டு ‘நல்லெண்ணையாக’, பெரிய பானைகளில் சேமிக்கப்படுகிறது. ”அதுல சமையல் பண்ணுவோம்.. ஊறுகா போடுவோம்.. அவுரு டெய்லி அந்த எண்ணெயில்தான் வாய் கொப்பளிப்பாரு.. எண்ணெய் தேச்சிக் குளிப்பாரு,” என்கிறார் ப்ரியா. வடிவேலன் சிரிக்கிறார். ”எண்ணெய்க் குளியல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்கிறார் வடிவேலன்.
வடிவேலனுக்குப் பல விஷயங்கள் பிடிக்கும். அவையனைத்துமே எளிமையான சந்தோஷங்கள். இளம் வயதில், நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடித்து, சுட்டுத் தின்பது.. கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டில் மட்டுமே இருக்கும் டிவியில் சினிமா பார்ப்பது.. ‘எனக்கு டிவி பாக்க ரொம்பப் புடிக்கும்.. டிவில படம் சரியாத் தெரிலன்னாக் கூட, அதுல, ‘ஒய்ய்ங்’னு வர்ற சத்தத்த கேட்டுகிட்டு இருப்பேன்!’.
அந்த வசந்த கால நினைவுகள், காலைச் சூரியன் எழுகையில் இருள் போல விரைவில் மங்கி விடுகின்றன. ‘நெலத்த மட்டுமே நம்பி பொழைக்க முடியாதுங்க.. ஏதோ வாடகைக் கார் ஓட்டறதுனால சமாளிக்க முடியுது.” அவரது டொயோட்டா ஈடியோஸ் காரில், அவர் ஊர் திருவளர்ச் சோலையில் இருந்தது எங்களை காவிரியாற்றங்கரைக்கு அழைத்து வந்தார். இந்தக் காரை அவர் 8% வட்டிக்கு தனியாரிடம் இருந்தது கடன் வாங்கியிருக்கிறார். மாதம் 25000 திருப்பிச் செலுத்த வேண்டும்.. பணம் புரட்டறது எப்பவுமே பிரச்சினைதான் என்கிறார்கள் தம்பதியினர். வீட்டிலிருக்கும் தங்கம்தான் கஷ்டகாலத்தை எதிர்கொள்ள உதவுகிறது. ”எங்கள மாதிரி ஆட்கள் வீடு கட்ட லோன் வாங்கனும்னா, 10 செருப்புத் தேய்ஞ்சு போயிரும்.. அவ்வளவு நடக்க விட்ருவாங்க,” என்கிறார் வடிவேலன்.
மாலை நேர வானம், பிங்க், நீலம், கருப்பு என ஒரு அழகிய ஆயில் பெயிண்டிங் போல இருக்கிறது. எங்கிருந்தோ ஒரு மயில் அகவுகிறது. ”ஆத்தில மரநாய்கள் நிறைய இருக்கும்,” என்கிறார் வடிவேலன். கொஞ்சம் தள்ளி, சிறுவர்கள் ஆற்றில் குதித்து மரநாய்கள் போலவே நீந்துகிறார்கள். ”நானும் இந்த வயசில இப்படித்தான் இருந்தேன்.. வேற எங்களுக்கு என்ன பொழுதுபோக்கு?.”






































