ஜக்ரித் ஆதிவாசி தலித் சங்காதன் (JADS) அமைப்பின் தலைவரான மாதுரி கிருஷ்ணஸ்வாமி சொல்கையில், மத்தியப்பிரதேச பழங்குடி சமூகங்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள், செயற்பாட்டாளர்களால் கணக்கெடுக்க முடியாதளவுக்கு அதிகமாக இருப்பதாக சொல்கிறார். “முக்கியமான விஷயம் என்னவென்றால், மிகக் குரூரமான வன்கொடுமை வழக்குகளில் பாஜகவின் அரசியல் ரீதியான ஆதரவு குற்றவாளிகளுக்கு இருக்கிறது,” என்கிறார் அவர்.
சிதி மாவட்டத்திலிருந்து ஒரு குரூரமான காணொளி இந்த வருட ஜூலை மாதத்தில் பரவியது. மது குடித்திருந்த பர்வேஷ் ஷுக்லா, ஒரு பழங்குடி மீது சிறுநீர் கழிக்கும் காணொளி அது. பாஜககாரரான ஷுக்லா, உடனே கைது செய்யப்பட்டார்.
பொதுமக்களின் கோபத்தை பெறும் வகையிலான காணொளி இல்லாத சம்பவங்களில் அத்தகைய துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. “பழங்குடி சமூகங்கள் பெரும்பாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டும் வெளியேற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்,” என்கிறார் அவர். “அதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படும் தன்மையில் இருக்கின்றனர். மேலும், அதிகாரமிக்க சமூகங்கள் அவர்களை அவமதித்து தாக்குவதற்கும் சட்டம் அனுமதிக்கிறது.”
நெமாவரில் பார்தியின் குடும்பத்தினர் கொல்லப்படுவதற்கு, சுரேந்திராவுக்கும் சகோதரி ருபாளிக்கும் இருந்த உறவுதான் காரணமென சொல்லப்படுகிறது.
இருவரும் கொஞ்ச நாட்களாகவே பழகி வந்தனர். ஆனால் அவர்களின் உறவு, சுரேந்திரா வேறோரு பெண்ணை மணம் முடிக்கப் போவதாக அறிவித்ததும் முடிவுக்கு வந்தது. ருபாளிக்கு வியப்பாக இருந்தது. “18 வயதானதும் அவளை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருந்தார்,” என்கிறார் பார்தி. ”ஆனால், உண்மையில் உடல் ரீதியாக உறவு வைத்துக் கொள்ள மட்டுமே அவர் விரும்பியிருக்கிறார். அவளை பயன்படுத்திவிட்டு, வேறொருவரை மணம் முடிக்க முடிவெடுத்தார்.”
கோபமடைந்த ருபாளி, சமூகதளத்தில் சுரேந்திராவை அம்பலப்படுத்தப்போவதாக மிரட்டியிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் பிரச்சினையை தீர்க்கலாமென அவரை தன் விவசாய நிலத்துக்கு ஒருநாள் மாலை வரும்படி அழைத்திருக்கிறார் சுரேந்திரா. பவனும் ருபாளியுடன் செல்ல, சற்று தூரத்தில் சுரேந்திராவின் நண்பர் பவனை நிறுத்தியிருக்கிறார். நிலத்தில் தனியான இடத்தில் ஒரு இரும்புத் தடியுடன் காத்திருந்த சுரேந்திராவை ருபாளி சந்தித்தார். அவரை சுரேந்திரா தலையில் தாக்கி, சம்பவ இடத்தில் கொன்றிருக்கிறார்.
பிறகு, ருபாளி தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் பவனுக்கு சுரேந்திரா குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். ருபாளியின் தாய், சகோதரி என வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து வரும்படியும் பவனுக்கு சொல்லியிருக்கிறார். உண்மையில், ருபாளியை சுரேந்திரா அழைத்த விஷயம் தெரிந்து குடும்பத்தில் இருந்த அனைவரையும் கொல்ல அவர் திட்டமிட்டிருந்தார். ஒவ்வொருவராக, அவர்கள் அனைவரையும் சுரேந்திரா கொன்று, தன் நிலத்திலேயே புதைத்தார். “மொத்தக் குடும்பத்தையும் இந்தக் காரணத்துக்காக கொல்ல முடியுமா?” எனக் கேட்கிறார் பார்தி.