பிரகாஷ் புந்திவால் வெற்றிலைகளுக்கு நடுவே நிற்கிறார். இதய வடிவிலான வெற்றிலைகள் மெல்லிய கொடிகளில் அடர்ந்து வளர்கின்றன. வெப்பம் மற்றும் காற்றிலிருந்து காக்க அவற்றின் மீது சிந்தடிக் வலை போர்த்தப்பட்டிருக்கிறது.
வெற்றிலை, பரவலாக இந்தியா முழுவதும் உணவுக்கு பின் சாப்பிடும் விஷயமாக இருக்கிறது. பலவகை விதைகள் மற்றும் பெருஞ்சீரகம், வெற்றிலை பாக்கு, ரோஜாப்பூ குல்கந்த் போன்றவை ஒரு இலையில் சுண்ணாம்புடன் கட்டி பீடாவாக போட வெற்றிலைகள் முக்கியம்.
11,956 பேர் வசிக்கும் அந்த கிராமம் நல்ல தரமான வெற்றிலைகளுக்கு பெயர் பெற்றது. குக்தேஷ்வரின் பிரகாஷ் குடும்பத்தை போல பலவும் பல காலமாக வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றன. தம்போலி சமூகத்தை சேர்ந்த அவர்கள், மத்தியப்பிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். தற்போது அறுபது வயதுகளில் இருக்கும் பிரகாஷ் ஒன்பது வயதிலிருந்து வெற்றிலை விற்று வருகிறார்.
ஆனால் புந்திவாலின் 0.2 ஏக்கர் நிலத்தில் பிரச்சினை. மே 2023-ல் பிபர்ஜாய் புயல், இந்த சிறு விவசாயியின் நிலத்தில் அழிவை ஏற்படுத்தியது. “எங்களுக்கு எந்தக் காப்பீடும் வழங்கப்படவில்லை. புயலில் எல்லாமே அழிந்திருந்தாலும் அரசாங்கம் எந்த உதவியும் செய்யவில்லை,” என்கிறார் அவர்.
பல விவசாயப் பொருட்களுக்கு வானிலை சார்ந்த காப்பீடை ஒன்றிய அரசு, தேசிய விவசாய காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கி வந்தாலும், அவற்றில் வெற்றிலை விவசாயம் இடம்பெறவில்லை.










