அது செப்டம்பர் 2023. நாம் பூ பூக்கும் காலத்துக்கு நடுவே பூக்களின் பள்ளத்தாக்கில் நிற்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிற பூக்கள் நிறைந்திருக்கிறன. அவற்றில் பல, இப்பகுதிக்கு சொந்தமானவை. வருடந்தோறும் பூப்பவை.
ஆனால் இந்த வருடம், பூக்கள் குறைவாகவே பூத்திருக்கின்றன.
1,200 மீட்டர் உயரத்தில் இருக்கும் காஸ் பள்ளத்தாக்கு யுனெஸ்கோவின் பாரம்பரிய தள விருதை 2012ம் ஆண்டு பெற்றது. அப்போதிருந்து அது மகாராஷ்டிராவின் பிரதானமான சுற்றுலா தளமாக பூ பூக்கும் காலமான ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை இயங்கி வருகிறது. அதில்தான் பிரச்சினையும் இருக்கிறது.
“யாரும் இங்கு வந்ததில்லை. காஸ் எங்களுக்கு ஒரு மலை மட்டும்தான். கால்நடைகளை இங்கு நாங்கள் மேய்ப்போம்,” என்கிறார் சுலாபாய் பாதாபுரி. “ஆனால் இப்போது மக்கள் பூக்களில் நடக்கின்றனர். புகைப்படங்கள் எடுக்கின்றனர். வேரோடு அவற்றை பிடுங்குகின்றனர்!” அவர்களின் அலட்சியத்தால் எரிச்சலிலிருக்கும் 57 வயதான அவர், “இது ஒன்றும் பூங்கா இல்லை. இந்த பூக்கள் பாறையில் பூப்பவை,” என்கிறார்.
காஸில் இருக்கும் பள்ளத்தாக்கு, 1,600 ஹெக்டேர் பரப்பளவு பாறை படுகை ஆகும். சதாரா மாவட்டத்தின் சதாரா தாலுகாவில் இருக்கும் அது காஸ் பதார் என அழைக்கப்படுகிறது.














