ஷியாம்லால் காஷ்யப் சடலத்தை வைத்து அவரது குடும்பம் மிரட்டப்பட்டது.
அர்ரகோத்தே என்ற ஊரைச் சேர்ந்த 20 வயது கூலித் தொழிலாளியான அவர் 2023 மே மாதம் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது 20 வயது மனைவி மார்த்தா அப்போது கர்ப்பிணியாக இருந்தார்.
“அது ஒரு தற்கொலை. 15 கி.மீ. தொலைவில் உள்ள, அருகாமை மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. பிணக்கூராய்வில் எந்த தவறும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்கிறார் அவரது அண்ணி 30 வயது சுக்மிதி காஷ்யப். அர்ரகோத்தே கிராமத்தில், தரிசு நிலத்தின் ஓரத்தில் அமைந்துள்ள, மங்கலாக விளக்கு எரியும் குடிசைக்கு வெளியே அமர்ந்துள்ளார் சுக்மிதி.
அந்த அரசு மருத்துவமனையில் ஓரிரு உறவினர்கள் ஷியாம் லாலின் உடலை வாங்கிச் செல்வதற்காக காத்திருக்கிறார்கள். இந்த மரணம் தந்த அதிர்ச்சியில், துயரத்தில் இருந்து மீளாத, அவரது குடும்பத்தினர் ஊரில், அவரது இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.
அந்த நேரத்தில், அவர்கள் குடும்பம் இந்து மதத்துக்கு மாறினால்தான் ஊரில் ஷியாம்லாலுக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியும் என்று உள்ளூர்காரர்கள் சிலர் கூறினார்கள்.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள், முதன்மையாக கூலி வேலை செய்தும், மூன்று ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்தும்தான் பிழைப்பை நடத்துகிறார்கள். நிலத்தில் விளையும் அரிசி, குடும்பம் சாப்பிடுவதற்குதான் செலவாகிறது. அவர்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரே வெளி வருமானம், ஷியாம் லால் முதுகு ஒடிய உழைத்துக் கிடைத்த கூலிதான். மாதம் சுமார் ரூ.3,000 சம்பாதித்து வந்தார் அவர்.
மோசமான வறுமையில் ஒரு குழந்தையை வளர்க்கும் சுமையை நினைத்து ஷியாம்லால் இப்படிச் செய்துகொண்டாரா என சந்தேகப்படும் சுக்மிதி “அவர் இறப்பதற்கு முன்பு எதுவும் எழுதிக்கூட வைக்கவில்லை,” என்கிறார்.








