"வெற்றிலைக் கொடி மட்டும் பிழைத்திருந்தால், எனக்கு குறைந்தது இரண்டு லட்சம் ரூபாயாவது [2023ஆம் ஆண்டில்] வருமானம் கிடைத்திருக்கும்", என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கூறுகிறார் துயூரி கிராமத்தைச் சேர்ந்த 29 வயது விவசாயி. கருணா தேவி பீகாரின் நவாடா மாவட்டத்தில் 2023 ஜூனில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளால் பயிரை இழந்தார். ஒரு காலத்தில் பசுமையான தோட்டமாக இருந்த அவரது பரேஜா, பளபளப்பான புகழ்பெற்ற மகஹி வெற்றிலைகளால் நிரம்பி வழிந்தது. இப்போது அவர் மற்றவர்களின் பரேஜாக்களில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பல நாட்களாக கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொண்ட ஒரு டஜன் மாவட்டங்களில் நவாடாவும் ஒன்று. "லக்தா தா கி ஆஸ்மான் சே ஆக் பராஸ் ரஹா ஹை அவுர் ஹம்லாக் ஜல் ஜாயேங்கே. தோபஹார் கோ தோ காவ்ன் ஏக்தம் சன்சன் ஹோ ஜாதா தா ஜைஸ் கி கர்ஃபு லக் கயா ஹோ [வானத்திலிருந்து நெருப்பு மழை பொழிவது போலவும், நாங்கள் எரிந்து போவது போலவும் தோன்றியது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போல் பிற்பகலில் கிராமம் முற்றிலும் வெறிச்சோடி காணப்படும்]", என்று அந்த ஆண்டு நிலவிய வெப்பத்தை விவரிக்கிறார். மாவட்டத்தின் வாரிசாலிகஞ்ச் வானிலை மையத்தில் அதிகபட்சமாக 45.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெப்ப அலை பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் 100க்கும் மேற்பட்டவர்களைக் பலி வாங்கியது என்று 2023, ஜூன் 18 தேதியிட்ட தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் "நாங்கள் பரேஜாவுக்கு செல்வோம்", என்று கருணா தேவி கூறுகிறார். ஆறு கதா [தோராயமாக ஒரு ஏக்கரில் பத்தில் ஒரு பங்கு] பரப்பளவில் பரவியுள்ள மகஹி வெற்றிலை பயிரிட ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வாங்கியதால் அக்குடும்பம் பெரிய ஆபத்தில் சிக்கவில்லை.





















