மூன்று விரல்கள், ஈரமான ஒரு செவ்வகத் துணி, மென்மையான ஒரு தொடுகை. “மிகவும் கவனமாக நான் இருக்க வேண்டும்.”
கடலோர ஆந்திரப்பிரதேசப் பகுதியின் இனிப்பு வகையான பூத்தரெகுலு பற்றி சொல்கிறார் விஜயா. அரிசி மாவினால் நுட்பமாக செய்யப்பட்ட படலத்துக்குள் வெல்லம், உலர் பழங்கள் மற்றும் நெய் வைக்கப்பட்டு செய்யப்படும் இனிப்பு வகை இதுவாகும். விழாக்காலங்களில் நன்றாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகை. அதை செய்வதில் திறன் வாய்ந்தவரான விஜயாவிடமிருந்து, தினசரி 200 ரெகுக்களை உள்ளூர் இனிப்புக் கடைகள் பெறுகின்றன. “பூத்தரெகு செய்கையில் முழு கவனம் செலுத்துவேன். யாரிடமும் பேசக் கூட முடியாது,” என்கிறார் அவர்.
“என் வீட்டில் எந்த விழா, சடங்கு நடந்தாலும் பூத்தரெகுலு இல்லாமல் நிறைவடையாது,” என்கிறார் ஜி.ராமகிருஷ்ணா. ஆத்ரேயபுரத்தில் வசிப்பவரான அவர், பேக்கிங் பொருட்கள் மற்றும் பெட்டிகள் வாங்க சில கடைகளுக்கு உதவுகிறார். “ஆச்சரியப்படுத்தும் இனிப்பு வகை என்பதால் எனக்கு அதை மிகவும் பிடிக்கும்! முதலில் ஏதோ காகிதமாக இருப்பது போல் தோன்றும். காகிதத்தை உண்ணுவது போல் கூடத் தோன்றும். ஆனால் ஒரு கடி கடித்தால், உங்கள் வாயில் அது கரைந்து போகும். இதைப் போன்ற ஓர் இனிப்பு உலகிலேயே இல்லையென நினைக்கிறேன்,” என்கிறார் பெருமையாக.
ஆந்திராவின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கொனசீமா மாவட்டத்தின் அரிசிதான் இந்த இனிப்புச் சுவைக்கான காரணம். “அரிசி ஒட்டியிருக்குமென்பதால், அதை யாரும் பயன்படுத்துவதில்லை. ரெகு (படலம்) செய்ய மட்டும்தான் அதை பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார் ராமச்சந்திரபுரம் ஒன்றியத்தை சேர்ந்த ஆத்ரேயபுரம் கிராமத்தில் வசிக்கும் இனிப்பு செய்பவரான கயேலா விஜயா கோடா சத்யாவதி. ஆத்ரேயபுரத்தின் பூதாரெகுவுக்கு புவிசார் அங்கீகாரம் 2023-ல் கிடைத்தது. புவிசார் அங்கீகாரம், ஜூன் 14, 2023-ல் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சர் ஆர்தர் காட்டன் ஆத்ரேயபுரம் பூத்தரெகுலா உற்பத்தியாளர் நலச்சங்கத்துக்கு வழங்கப்பட்டது.
மாநில அளவில் புவிசார் அங்கீகாரம் கொடுக்கப்படும் மூன்றாவது உணவு வகை (திருப்பதி லட்டு மற்றும் பந்தர் லட்டு ஆகியவை மற்றவை) இது. கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள் என பல வகைகளில் 21 பொருட்களுக்கு ஆந்திரப்பிரதேசம் புவிசார் அங்கீகாரம் பெற்று வைத்திருக்கிறது. கடந்த வருடத்தில், பூத்தரெகுவுடன் சேர்த்து கோவாவின் பெபிங்கா இனிப்புக்கும் புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கு முன் மொரேனாவின் கஜக் மற்றும் முசாஃபர் நகரின் கர் ஆகியவற்றுக்கு புவிசார் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.




















