வட தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டக் கடலோரப் பகுதியில் உள்ள கிராமங்களின் எல்லைகளைப் பாதுகாக்கிறது கன்னிசாமி. மீனவச் சமூகத்தின் இந்தக் காவல் தெய்வம் இந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப்போலவே தோற்றமளிக்கிறது. ‘அவர்’ பளிச்சென்ற வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளார். இடுப்பில் வேட்டியும், தலையிலே துண்டும் அணிந்திருக்கிறார். பாதுகாப்பாக கரை திரும்பவேண்டும் என இந்த தெய்வத்தை வேண்டிவிட்டே மீனவர்கள் கடலுக்குச் செல்கிறார்கள்.
மீனவக் குடும்பங்கள் கன்னி சாமியை வெவ்வேறு வடிவங்களில் வணங்குகிறார்கள். வட சென்னையில் இருந்து பழவேற்காடு வரையில் இந்த வழிபாடு பிரபலம்.
எண்ணூர் குப்பம் மீனவர்கள் படகிலும், நடந்தும் சுமார் 7 கி.மீ. பயணம் செய்து அத்திப்பட்டு சென்று கன்னிசாமி சிலைகளை வாங்கி வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆடி மாதம், ஒரு வாரத்துக்கு திருவிழா நடக்கும். 2019-ல் இந்த ஊரைச் சேர்ந்த மீனவர்கள் கன்னிசாமி சிலை வாங்குவதற்காக அத்திப்பட்டு சென்றபோது நானும் அவர்களோடு சேர்ந்து பயணித்தேன். வட சென்னையில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையம் அருகே கொசஸ்தலையாற்றின் கரையோரம் ஒன்று சேர்ந்து அத்திப்பட்டு நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வீட்டை நெருங்கினோம். அங்கே தரையில் கன்னிசாமி சிலைகளை வரிசையாக நிறுத்தியிருந்தார்கள். அவை வெள்ளைத் துணியால் மூடிவைக்கப்பட்டிருந்தன. வெள்ளை வேட்டியும் நெற்றியில் திருநீரும் அணிந்த மனிதர் ஒருவர் அந்த சிலைகளுக்கு கற்பூரம் காட்டிக்கொண்டிருந்தார். 40 வயது கடந்த அந்த மனிதர் ஒவ்வொரு கன்னிசாமி சிலைக்கும் பூசை செய்து, ஒவ்வொரு மீனவரின் தோளில் எடுத்து வைத்தார்.



































