அதே வளாகத்துக்குள் ஒரு மசூதியும் இருக்கிறது. அருகே ஒரு வசுக்கானா இருக்கிறது. அம்ஜத் அங்கு சென்று கை, கால், முகத்தை கழுவிக் கொண்டு, முடியைக் கொண்டை போட்டு, ஆரஞ்சு நிற தொப்பியை அணிந்து, பேசத் தொடங்குகிறார். “நான் மாதந்தோறும் இங்கு வந்து குறைந்தபட்சம் ஒரு வாரம் தங்குகிறேன்.” குழந்தையாக அவர், அடிக்கடி இங்கு வரும் தந்தையுடன் வந்திருக்கிறார். “எனக்கு 10 அல்லது 15 வயது இருக்கலாம். என் அப்பா இங்கு என்னை முதன்முறையாக கூட்டி வந்தார். இப்போது நான் 30 வயதை கடந்து விட்டேன். என் மகனை சில முறை இங்கு கூட்டி வருகிறேன்,” என்கிறார் அவர்.
தர்வேஷி சமூகத்தை சேர்ந்த சிலர், தர்காவின் அடித்தளத்தில் பாய் போட்டு உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அம்ஜத்தும் தன் பையை ஒரு சுவரருகே வைத்திருந்தார். ஒரு பாயை எடுத்து தரையில் விரிக்கிறார். ஜல்காவோன் மாவட்ட பச்சோராவிலுள்ள கோண்ட் குப்பத்தில் தன் வீடு இருப்பதாக சொல்கிறார் அவர்.
தன் மதத்தை சொல்ல அம்ஜத் தயங்கவில்லை. அவரின் குடும்பத்தை பற்றி கேட்டேன். “தந்தையும் இரு தாய்களும் நான்கு சகோதரர்களும் உண்டு. நான்தான் மூத்த சகோதரன். எனக்கு பிறகு ஷாருக், சேத் மற்றும் பாபர் ஆகியோர் இருக்கின்றனர். ஐந்து பெண் குழந்தைகளுக்கு பிறகு நான் பிறந்தேன்.” அவர்களின் இஸ்லாமிய பெயர்களை நான் கேட்டேன். “கோண்ட்களாகிய எங்களுக்கு இந்து மற்றும் இஸ்லாமியப் பெயர்கள் உண்டு. எங்களுக்கு மதம் இல்லை. சாதியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்களின் மதம் சற்று வித்தியாசமானது. நாங்கள் ராஜ்கோண்ட்,” என்கிறார்.
பொது தளத்தில் இருக்கும் தகவலின்படி, 300 வருடங்களுக்கு முன்பு, ராஜ்கோண்ட் பழங்குடியினரின் ஒரு பகுதியினர் இஸ்லாமுக்கு மதம் மாறியிருக்கின்றனர். அவர்கள் முசல்மான்/முஸ்லிம் கோண்ட் என்றறியப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் கோண்ட் சமூகத்தை சேர்ந்த சில உறுப்பினர்களை இப்போதும் சந்திக்க முடியும். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் ஜால்காவோன் மாவட்டங்களில் அவர்களை பார்க்கலாம். ஆனால் அம்ஜத்துக்கு இந்த வரலாறு தெரியவில்லை.
“இஸ்லாமியர்களை நாங்கள் மணம் முடிப்பதில்லை. கோண்ட்களைதான் மணம் முடிப்போம். என் மனைவி சாந்தனி கோண்ட்,” என அவர் தொடர்கிறார். “என் மகள்கள் லாஜோ, அலியா மற்றும் அலிமா. அவர்கள் அனைவரும் கோண்ட்தான், இல்லையா?” ஒருவரின் மதத்தை பெயர்களை கொண்டு அடையாளங்காண முடியும் என அம்ஜத்துக்கு தோன்றவில்லை. சகோதரிகளை பற்றி அவர் சொல்லத் தொடங்குகிறார். “என் மூத்த அக்கா நிஷோரி. அவருக்கு பிறகு ரேஷ்மா. சவுசல் மற்றும் திதோலி ஆகியோர் ரேஷ்மாவுக்கு தங்கைகள். இவை எல்லாமும் கோண்ட் பெயர்கள்தான், பாருங்கள். ஆனால் கடைக்குட்டி மேரி. அது ஒரு கிறித்துவ பெயர். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு பிடித்ததை நாங்கள் பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான்.” நிஷோரிக்கு வயது 45. இளையவர் மேரி, முப்பது வயதுகளில் இருக்கிறார். அவர்கள் அனைவரும் கோண்ட் ஆண்களைதான் மணம் முடித்திருக்கிறார்கள். அவர்களில் எவரும் பள்ளிக்கு சென்றிருக்கவில்லை.
அம்ஜத்தின் மனைவி சாந்தனிக்கு படிப்பறிவு இல்லை. மகள்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்து கேட்டதற்கு, “என் மகள்கள் ஓர் அரசுப் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் எங்கள் சமூகத்தில் பெண் குழந்தைகள் அதிகம் படிக்க ஆதரவு இருப்பதில்லை,” என்கிறார் அவர்.